வங்கி மோசடி-பெண் டாக்டர் உள்பட 3 பேரிடம் சிபிஐ விசாரணை
கடையநல்லூர்: கடையநல்லூர் வங்கியில் ரூ.4 கோடி மோசடி செய்த வழக்கில் பெண் டாக்டர், வங்கி மேலாளர் உள்பட 3 பேரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தென்காசியை சேர்ந்தவர் பிரபல டாக்டர் வெங்கடேஷ்வரன். இவர் சென்னையை சேர்ந்த தனது நண்பர் மாயா ராம் என்ற பெண் டாக்டருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட், காற்றாலை உள்ளிட்ட தொழில்கள் செய்து வந்தார்.
இதனிடையே தொழில் அபிவிருத்திகாக டாக்டர் வெங்கடேஷ்வரன், மாயா ராம் இருவரும் சேர்ந்து கடையநல்லூர் வங்கி மேலாளர் அய்யாமணி துணையுடன் போலி ஆவணங்கள் மூலம் 2 கோடியோ 65 லட்சம் கடன் வாங்கினர். இதற்காக அய்யாமணிக்கு 35 லட்சம் லஞ்சமாக இவர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.
வெங்கடேஷ்வரன் பணத்தை திருப்பி செலுத்தாததால் அத்தொகை வட்டியுடன் சேர்ந்து 4 கோடியாக உயர்ந்தது.
இதனிடையே மாயாராம் தன்னை ஏமாற்றி பணத்தை எடுத்து கொண்டதாக சென்னை சிபிஐயில் புகார் கொடுத்தார் வெங்கடேஷ்வரன்.
இதையடுத்து மாயாராம் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த சிபிஐ வெங்கடேஷ்வரன் மற்றும் அய்யாமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த மோசடியில் வங்கி உயரதிகாரிகள் உள்பட பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சிபிஐ சந்தேகிப்பதால் வெங்கடேஷ்வரன், அய்யாமணி, மாயா ராம் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க மதுரை நீதிமன்றத்தில் சிபிஐ மனுதாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் மூன்று பேரையும் 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதியளித்தார்.
இதையடுத்து சிபிஐ போலீசார் 3 பேரிடமும் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகும் என்பதால் வங்கி உயரதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.