எம்.பிக்களின் 3 மாத ஹோட்டல் பில் ரூ. 3.7 கோடி!
டெல்லி: கைக்காசை செலவழித்து மத்திய அமைச்சர்கள் எஸ்.எம்.கிருஷ்ணாவும், சசி தரூரும் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் அவர்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
ஆனால், கடந்த 3 மாதங்களாக டெல்லியில் உள்ள சாம்ராட் ஹோட்டலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல எம்.பிக்கள் தங்கிச் சென்றதில் ரூ. 3.7 கோடிப் பணத்தை கட்டணமாக செலுத்தியுள்ளது அரசு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சாம்ராட் ஹோட்டல், இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் (ஐடிடிசி) சொந்தமானது.
சமூக நல சேவகர் சுபாஷ் சந்திர அகர்வால் (இவர் நம்ம ஊர் டிராபிக் ராமசாமி போல. பொது நல வழக்குகள் தொடர்வது, தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி பெரும் பெரும் புள்ளிகளையும் கலங்கடிப்பது இவரது வேலை. நீதிபதிகள் சொத்து விவரங்கள் குறித்த விவகாரத்தையும் தனது ஆர்.டி.ஐ அம்பு மூலம் வெளிக் கொண்டு வந்தவர் இவர்தான்) தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஐடிடிசியிடம் இதுதொடர்பாக கேட்டிருந்தார்.
அதற்கு ஐடிடிசி அனுப்பியுள்ள பதிலில், கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 74 எம்.பிக்கள் சாம்ராட் ஹோட்டலில் தங்கினர்.
அவர்களுக்கான அறை வாடகை மட்டும் ரூ. 3.71 கோடி ஆகும். இந்தத் தொகையை செலுத்த வேண்டிய பொறுப்பு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையின் எஸ்ட்டேட் இயக்குநரகம் ஆகும்.
இதுதவிர சாப்பாடு, ஜிம்னாசிய செலவு உள்ளிட்ட அனைத்து உபரிச் செலவுகளையும் சம்பந்தப்பட்ட எம்.பிக்கள் கட்ட வேண்டும்.
இந்த ஹோட்டலில், சீசன் அல்லாத நேரத்தில் ஒரு டீலக்ஸ் அல்லது சூப்பர் டீலக்ஸ் அறையின் ஒரு நாள் வாடகை ரூ. 8000 முதல் ரூ. 9000 ஆகும். எம்.பிக்களுக்கு சகாய விலையாக, ஒரு இரவுக்கு ரூ. 6000 என வாடகை வசூலித்துள்ளனராம்.
ஏன் எம்.பிக்கள் தொடர்ந்து ஹோட்டல்களில் தங்குகின்றனர் என்று லோக்சபா கமிட்டி தலைவர் ஜெய் பிரகாஷ் அகர்வாலிடம் கேட்டபோது, எம்.பிக்களுக்கு வீடுகள் ஒதுக்கும் பணி முடிந்து விட்டது. சில நேரங்களில் எம்.பிக்கள் தங்களது வீடுகளுக்கு இடம் பெயருவதில் தாமதம் ஏற்படுகிறது.
அதற்கு முக்கிய காரணம், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் ஏற்கனவே குடியிருப்பவர்கள் காலி செய்யாமல் இருக்கலாம் அல்லது மராமத்துப் பணிகள் நடைபெறலாம். இந்த மாதிரியான காரணங்களால்தான் எம்.பிக்கள் ஹோட்டலில் தங்க நேரிடுகிறது என்றார்.
இந்த எம்.பிக்கள் பரவாயில்லை. முன்னாள் எம்.பிக்களான கோவிந்தா, தர்மேந்திரா ஆகியோர், ஹோட்டல் அசோக் மற்றும் ஜன்பத் ஆகியவற்றில் தங்கியிருந்தபோது ரூ. 1.3 கோடி வரை பில்லை ஏற்றி விட்டுச் சென்று விட்டனராம். இந்த பில் தொகை இன்னும் கூட செட்டில் செய்யப்படவில்லையாம்.
பிரணாப் முகர்ஜி இதுகுறித்தெல்லாம் கூட கவலைப்பட்டால் இந்தியப் பொருளாதாரத்திற்கு இன்னும் நன்றாக இருக்கும்.