பல்கலையில் அரசியல்!-ராகுலுக்கு வைகோ கண்டனம்
இமயம் டி.வியின் நிர்வாக இயக்குநர் ஜெபராஜ் மற்றும் ஊழியர்கள் வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்தனர்.
அப்போது சசிகலாவின் கணவர் எம்.நடராஜனும் உடனிருந்தார்.
அப்போது வைகோ பேசுகையில்,
இது ஒரு மகிழ்ச்சிகரமான ஆச்சரியம். துன்பங்கள் சூழ்ந்தாலும் தமிழ் மக்களுக்காக பாடுபடுகிற இயக்கமான மதிமுகவோடு இணைந்து பணியாற்றுவது அவரது உள்ளத்தில் ஒரு நிறைவை தரும் என்று இணைகிறார் ஜெபராஜ்.
அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலக தமிழர்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கிற இயக்கம் மதிமுக பனிக்காலம் முடிந்தால் வசந்தம் வரும் என்பது போல இனி நமக்கும் வசந்தம் வரும். வெற்றிகள் வரும்.
அண்ணா நூற்றாண்டு தொடக்க விழாவை மதுரையில் மதுரை மண்டல மாநாடாக நடத்தினோம். நூற்றாண்டு நிறைவு நாளை திருச்சியில் 15ம் தேதி திருச்சி மண்டல மாநாடாக நடத்த இருக்கிறோம்.
இலங்கை முகாம்களில் தமிழர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். இந்த கொடுமைகளை மக்களிடம் எடுத்து சொல்ல இந்திய அரசு அனுமதிப்பதில்லை.
ஈழத் தமிழர்கள் ரத்தக் கண்ணீர் வடிப்பதற்கும், அவர்கள் சிறுக சிறுக மடிவதற்கும் இந்திய அரசும் ஒரு காரணம். போரை நடத்தியதே இந்திய அரசு, ஆயுதங்கள் கொடுத்தது இந்திய அரசு. நேற்று வரை இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்படவில்லை.
நாங்கள் இனி ஈழ தமிழர்களை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று ராகுல்காந்தி கூறியிருப்பது, அவருக்கு வரலாறு தெரியவில்லை அல்லது தமிழர்களை முட்டாளாக்கப் பார்க்கிறார் என்று தான் அர்த்தம். அப்படி எல்லாம் கூறி தமிழர்களை ஏமாற்றிவிட முடியாது.
ஒரு பல்கலைக்கழகத்தில் (சென்னை அண்ணா பல்கலை) மாணவர்களை சந்தித்து அரசியல் இயக்கத்தில் சேருங்கள் என்று ராகுல் கூறுவது மிகமிக தவறு. இது கண்டனத்திற்குரியது என்றார்.