பொங்கலுக்குள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் - இல.கணேசன்
வேலூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்குள் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் பாஜக சார்பில் கோவை உலகத் தமிழர் மாநாட்டின்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
வேலூர் வந்த இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் தமிழர்கள் மீதான பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்ய ஆளுங்கட்சியின் கூட்டணியினரை கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். மக்களவையே அந்தக் குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் தமிழக எம்.பி.க்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இலங்கை ராணுவத்தினரால் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்துதல் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. வருகிற 29-ந்தேதி தஞ்சாவூரிலும் அக்டோபர் 6-ந்தேதி ராமேசுவரத்திலும் 8-ந்தேதி சேலத்திலும் 9-ந்தேதி சென்னையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
உலகத்தமிழ் மாநாடு கோவையில் அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரத்தில் நடத்தப்பட இருக்கிறது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. உலக தமிழர்களின் நலனை பற்றி அக்கறை எடுக்கும் மாநாடாக இது அமைய வேண்டும்.
வருகிற தைப்பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் சொந்த குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட வேண்டும்.
வருகிற தைப்பொங்கலுக்கு முன்னதாக இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வு காணாவிட்டால் கோவையில் உலக தமிழ் மாநாடு நடக்கின்ற இடத்தில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழ் மாநாடும் தேவை, அதே சமயம் உலக தமிழர்களின் சுதந்திரமும் தேவை. அதற்கு தமிழக அரசு முயற்சி எடுத்தால் அதற்கு பா.ஜ.க. ஒத்துழைப்பு கொடுக்க தயார்.
தமிழக - கேரள வனப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக தேடுதல் வேட்டையை அரசு தொடங்கி உள்ளது. நாங்கள் இதுபற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறோம். அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை. தீவிரவாதிகள் தொடர்பாக சாதக பாதகங்களை பாராமல் மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக யாரும் நிரூபிக்கவில்லை என்று தேர்தல் அதிகாரி கூறி இருக்கிறார். தவறு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிற உறுதியை தேர்தல் அதிகாரிகள் தரவேண்டும். அதற்கேற்ப எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தை மேம்படுத்த வேண்டும்.
சமச்சீர் கல்வி திட்டங்களை எப்படி அமல்படுத்துவது என்று சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பும் வகையில், சென்னையில் வருகிற அக்டோபர் 10-ந்தேதி கருத்தரங்கினை நடத்த உள்ளோம்.
இந்து கோவில்களின் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க கோரி வருகிற 5-ந் தேதி இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட உள்ள ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதாவினர் கலந்து கொள்வார்கள் என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications