தலித் விரோத போலீஸ்-பாண்டியன் குற்றச்சாட்டு
கரூர்: தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிராக அவர்களது வாழ்வாதார, ஜீவாதார உரிமைகளை பறிக்கும் செயலில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று தலித் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கரூரில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழக போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கிராமங்களில் ஏற்படும் ஜாதீய கொடுமைகளின் போது தலித் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுகின்றனர்.
பாதிப்புக்குள்ளாகும் தலித் மக்கள் தங்களுக்கு நியாயம் வேண்டி காவல் நிலையத்தின் கதவுகளை தட்டும் போது போலீசார் பொருளாதாரத்தை அளவு கோலாக கொண்டு செயல்படுகின்றனர்.
தலித் மக்களிடம் நீதியும், நேர்மையும் மட்டுமே உள்ளது. பணம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு நீதி வஞ்சிக்கப்படுகின்றது. இதனால் அவர்கள் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகினறனர். சமுதாயத்திலும் புறக்கணிக்கப்படுகின்றனர்.
பொய் வழக்கு போடுகின்றனர்...
மேலும், வழக்குகளின் போது தேவையின்றி தலையிடும் போலீசார் புகார்தாரர்களை மிரட்டி பணியவைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். எதிரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு தலித் மக்கள் மீது பொய் வழக்கு தொடுத்து சிறைக்கு அனுப்பும் கொடுமை நடைபெறுகின்றது.
உரிமைகள் மறுக்கப்படுகின்றது...
இந்த சம்பவங்கள் குறித்து தகுந்த ஆதரங்களுடன் தமிழக காவல்துறை தலைவருக்கும், துறை அமைச்சரான முதல்வர் கருணாநிதிக்கும் சுட்டிக்காட்டியும் எடுத்துக் காட்டும் உரிய நேரத்தில் நியாயம் கிடைப்பதில்லை. தலித் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றது.
எனவே இந்த விஷயத்தில் இனியும் அமைதியாக இருந்து போலீசாரின் செயலுக்கு துணை போக விரும்பவில்லை.
தலித் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகள் குறித்து தகுந்த ஆதரங்களுடன் டெல்லியில் உள்ள மனித உரிமை ஆணையம் , தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க உள்ளோம்.
புகாரின் அடிப்படையில் தவறு செய்த போலீசார் மீது உரிய நடவடிக்கை துறை அமைச்சரான முதல்வர் கருணாநிதி பாராபட்சமற்ற நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்றார்.