தயாநிதி மாறன் தலைமையில் சுவிட்சர்லாந்து, துருக்கி, இத்தாலிக்கு வர்த்தக குழு
டெல்லி: ஜவுளித் துறையில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தலைமையிலான வர்த்தக் குழுவினர் வருகிற 26-ம் தேதி முதல் சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளனர்.
ஜவுளி இயந்திரங்கள், நூலிழை மற்றும் ஆடைகள் உற்பத்தி, ஆகியவற்றில் சுற்றுச் சூழலுக்கு உகந்த தொழில் பிரிவுகளை உருவாக்குதல் மற்றும் தொழில்நுட்ப ஜவுளியில் முதலீடுகளை கொண்டு வருவதும், இந்திய உள்நாட்டு சந்தையில் ஆடை பிராண்டுகளை கொண்டு வருவதும் இந்தக் குழுவின் சுற்றுப்பயணத்தின் நோக்கமாகும்.
ஜவுளித் துறையில் அன்னிய முதலீடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஜவுளித் துறை அமைச்சகம் ஏற்கனவே இந்தியாவில் முதலீடுகள் செய்ய வாய்ப்புள்ள நாடுகள் குறித்து கண்டறிவதற்கு ஆய்வு தொடங்கியது.
இந்த ஆய்வில் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, துருக்கி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நம் நாட்டில் ஜவுளித் துறையில் முதலீடு செய்வதற்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
ஜவுளித் துறையில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பது அமைச்சர் தயாநிதி மாறனின் கொள்கையாகும். இந்தியாவிற்கு வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள், இந்தியாவில் விற்பனை செய்யுங்கள், இந்தியாவில் பணம் சம்பாதியுங்கள் என்பதே அவர் செயல்படுத்தி வரும் கொள்கையாகும்.
விரும்பிய இலக்கை அடைவதற்கு முதல் முறையாக அரசும், ஜவுளித் தொழிற்சாலைகளும் தங்களது முயற்சிகளை ஒருங்கிணைத்து ஜவுளித் துறையில் முதலீடுகளை ஈர்க்கவுள்ளனர். இதனை எடுத்துக்காட்டும் வகையில் வர்த்தகக் குழுவில் ஜவுளி தொழிற்சாலைகளின் பல்வேறு தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெறும் கண்காட்சியில் வர்த்தகக் குழு அந்நாட்டின் முக்கிய ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடும். இதே போல இத்தாலியின் மிலான் நகரிலும், துருக்கியின் இஸ்தான்புல் நகரிலும் பிரசித்தி பெற்ற நார், இழை மற்றும் ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களோடு இக்குழுவினர் கலந்துரையாடுவர்.
இரண்டாவது கட்டமாக தொழில்நுட்ப ஜவுளியில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு நவம்பர் 23-ம் தேதி 26-ம் தேதி வரை இந்த வர்த்தகக் குழுவினர் ஜெர்மனியின் பிராங்க்பர்ட், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் ஆகிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள்.
8 சதவிகித உயர் வளர்ச்சி விகிதத்திற்கு 2015-ம் ஆண்டு வாக்கில் இந்திய ஜவுளித் துறைக்கு மேலும் கூடுதலாக ரூ.1,10,000 கோடி முதலீடு தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது உள்நாட்டு முதலீடு ரூ.82,550 கோடி மற்றும் நேரடி அன்னிய முதலீடு ரூ.27,490 கோடியை உள்ளடக்கியதாக இருக்கலாம்.
ரூ.2,83,966 கோடியாக உள்ள இந்திய ஜவுளி பொருளாதாரம் 2015-ம் ஆண்டில் ரூ.5,03,380 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்நாட்டு விற்பனை ரூ.2,74,800 கோடியாகவும், ஏற்றுமதி ரூ.2,06.000 கோடியாக இருக்கும்.
சுவிட்சர்லாந்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 492.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதில் ஜவுளி வர்த்தகம் 13 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதில் இந்தியாவுடனான ஜவுளி வர்த்தகம் 89 மில்லியன் அமெரிக்க டாலராகும். இதேபோல 70 பில்லியன் மொத்த ஜவுளி வர்த்தகம் கொண்டுள்ள இத்தாலி, இந்தியாவுடன் 972 மில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகம் செய்கிறது.
மேலும் துருக்கியின் ஜவுளி வர்த்தகம் 34 பில்லியன் அமெரிக்க டாலராகும். இதில் இந்தியாவின் பங்கு 11 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
தயாநிதி மாறன் தலைமையேற்று செல்லும் உயர்நிலை வர்த்தகக் குழுவில் கோவை பி கே எஸ் டெக்ஸ்டைல்ஸ் தலைவர் செந்தில் குமார், தமிழ்நாடு, ஹரியானா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள ஷாகி எக்ஸ்போர்ட்ஸ் தலைவர் ஹரீஷ் அகுஜா, திருப்பூர் வாசா கார்மென்ட்ஸ் தலைவர் ராமசாமி, திருப்பூர் விஜயேஷ்வரி யார்ன் தலைவர் ஏ எல் ராமச்சந்திரன், திருப்பூர் யுவராஜ் டெக்ஸ்டைல்ஸ் தலைவர் எம் எம் இளங்கோ உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.