சமச்சீர் கல்வியை அமலாக்க அவசரச் சட்டம்
சென்னை: தமிழகத்தில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த அவசரச் சட்டத்தை தமிழக ஆளுநர் பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், சமச்சீர் கல்வி, வரும் 2010ம் கல்வியாண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் அமல்படுத்தப்படும்.
2011ம் ஆண்டிலிருந்து 2ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பிலும், அடுத்தடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
மேலும், மாநிலக் கல்வி திட்டம், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேஷன், ஓரியண்டல் ஆகிய நான்கு கல்வி வாரியங்களை ஒருங்கிணைத்து மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம்
தொடங்கப்படும் என்றும், அதேபோல ஒரே மாதிரியான பொதுப் பாடத்திட்ட முறையும் கொண்டு வரப்படும் எனவும் அரசு அறிவித்தது.
இதையடுத்து தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு அடி்படையில், சமச்சீர் கல்விக்கான வரைவுப் பொதுப் பாடத்திட்டம் தயாரித்து முடிக்கப்பட்டு விட்டது. இப்போது பாடநூல்கள் எழுதும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி முறையை நடைமுறைப்படுத்திட மாநிலப் பொதுப் பள்ளி கல்வி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாரியத்துக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பெருமாள்சாமி தலைவராக இருப்பார். பள்ளிக் கல்வித்துறை கூடுதல் செயலாளர், தேர்வுத்துறை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்கக இயக்குநர், இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.