ரூ. 47.74 கோடியில் விரைவில் காங்கேயம் காவிரி 2வது கூட்டுக் குடிநீர்த் திட்டம்- ஸ்டாலின்
சென்னை : விரைவில் காங்கேயம் காவிரி 2வது கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ. 47.74 கோடியில் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ஸ்டாலின் பதிலளிக்கையில்,
ஈரோடு மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் ரூ.47.74 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டப்பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் 24.03.2010 அன்று பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது.
விலைப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டதும் இந்த திட்டப்பணிகள் தொடங்கப்படும். 18 மாதங்களுக்குள் இந்த திட்டம் நிறைவேற்றப் படும். வெள்ளக்கோயில் நகராட்சிப் பகுதியில் உள்ள மக்களுக்கு நாளொன்றுக்கு தனி நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீரும், காங்கேயம் பகுதியில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் குடிநீரும், ஊரகப் பகுதிகளில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் குடிநீரும் இந்த திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும்.
ஏற்கனவே 2007ம் ஆண்டு காங்கேயம் பகுதியில் மட்டும் குடிநீர் வழங்க ரூ.12.13 கோடி மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டது.இதில் வெள்ளக்கோயில் நகராட்சி மற்றும் வழியோர கிராமங்களையும் இணைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வந்தது. எனவே இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்து காங்கேயம் பேரூராட்சி, வெள்ளக்கோயில் நகராட்சி மற்றும் 174 வழியோர கிராமங் களையும் இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இணைத்து ரூ.47.74 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது என்றார் ஸ்டாலின்.
பெரியகருப்பன் – அதிமுக கடும் மோதல் –ஸ்டாலின் சமரசம்
இதற்கிடையே கேள்வி நேரத்தின்போது கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. விஜயக்குமார் பேசுகையில், கும்மிடிப்பூண்டி அருகே சித்திராஜ் கண்டிகை பிரசன்னை வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைத்து குட முழுக்கு செய்யப்படுமா என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், 79 ஆண்டுகளுக்குப்பிறகு அந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. 75 சதவீத புனரமைப்பு பணிகள் முடிந்து விட்டது. மீதமுள்ள பணிகளையும் முடித்து குட முழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதை ஏற்காத அ.தி.மு.க. எம்.எல்.ஏ. விஜயகுமார் விளக்கம் கேட்க தொடர்ந்து எழுந்து நின்றார். அவருக்கு சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை.
இதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்று விஜயகுமார் பேச அனுமதி கொடுக்க வேண்டும் என்றனர்.
அமைச்சர் சொன்ன பதிலையும் ஏற்க அ.தி.மு.க. வினர் மறுத்தனர். இதனால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. கூச்சலும், குழப்பமுமாக இருந்தது.
அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின்,
உறுப்பினர் குறிப்பிட்ட, கோவில் பணிகள் சிறப்பாக நடந்து வருவதாகவும் 75 சதவீத பணிகள் முடிந்து விட்டதாகவும் அமைச்சர் கூறுகிறார். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை என்று உறுப்பினர் கூறுகிறார். நடைபெற்ற பணிகளை காட்டுவதற்காக உறுப்பினரை நேரில் அழைத்து செல்ல தயார் என்று அமைச்சர் கூறி இருக்கிறார். எனவே உறுப்பினர் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றார்.
பின்னர் அமளி அடங்கியது.