சீனாவில் வேர்ல்டு எக்ஸ்போ 2010 பிரமாண்ட துவக்கம்!
வருகிற அக்டோபர் இறுதி வரை 6 மாதங்கள் நடக்கும் இந்த பிரமாண்ட வர்த்தகத் திருவிழாவில் 200 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கண்காட்சிக்கு ஒரு நாளைக்கு 4 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சர்வதேச கண்காட்சி உலகின் மறக்க முடியாத நிகழ்வாக அமையும் என்று, வேர்ல்டு எக்ஸ்போ துவக்க விழாவில் பங்கேற்ற சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் தெரிவித்தார்.
எக்ஸ்போவை துவக்கி வைத்த ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மேனுவல், "இந்த கண்காட்சி சீனாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் பாலமாக அமையும். புதிய உறவுகள் பூக்கக் காரணமாகும்" என்றார்.
இந்த கண்காட்சி வெறும் வர்த்தக நோக்கில் மட்டும் அமையாமல், 'பெட்டர் சிட்டி; பெட்டர் லைப்' என்ற கருத்தை வலியுறுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சிக்காக மட்டும் 54 மில்லியன் டாலர் செலவிட்டுள்ளது ஷாங்காய் நகர நிர்வாகம். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
1851ம் ஆண்டு முதன் முதலில் லண்டனில் ஆரம்பித்தது இந்த சர்வதேச கண்காட்சி. அதன்பிறகு உலகின் முக்கிய நகரங்களிலெல்லாம் இந்தக் கணகாட்சி நடந்து வருகிறது.
கடந்த 2000 ஆண்டில் ஹனோவரில் நடந்த கண்காட்சிக்குப் பிறகு, மீண்டும் 2005ல் ஜப்பானில் நடந்தது.
அடுத்த கண்காட்சி 2015ம் ஆண்டு இத்தாலியின் மிலன் நகரில் நடக்கவுள்ளது.