திமுக, காங். கலந்து கொண்ட கடையநல்லூர் விழா தேர்தலுக்கு அச்சாரம்-ஸ்டாலின்
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளுக்கான விழா, வளர்ச்சி திட்ட பணிகளின் அடிக்கல் நாட்டு விழா, சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் மணிமண்டபம் பணி தொடக்க விழா, அச்சன்புதூரில் புதிய மின்நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடங்கள் திறப்பு விழா, தியாகி கக்கன் நூற்றாண்டு விழா ஆகியவை கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாளகத்தில் நேற்று மாலை நடந்தது.
விழாவுக்கு சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மத்திய கப்பல் போக்குவர்தது துறை அமைச்சர் ஜிகே வாசன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயராமன் வரவேற்றார்.
துணை முதல்வர் ஸ்டாலின் ரூ.60 கோடியே 78 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான திட்டங்களுக்கான கல்வெட்டுகளை ரிமோட் மூலம் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொன்னவர் அறிஞர் அண்ணா. அவர் வழியில் வந்த கலைஞர் அந்த எண்ணத்தை நிறைவேற்றி வருகிறார். எதிர்கட்சிகளுக்கும் மதிப்பு அளித்து வருகிறார். இன்றைய அரசியல் நிலை அப்படி கூறும்படியாகவா இருக்கிறது, நினைத்தால் வேதனைப்பட வைக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
இரு கட்சி தொண்டர்கள் கலந்து இருக்கும் இந்த நிகழ்ச்சியை பார்த்தால் வர இருக்கும் தேர்தல் அச்சாரத்திற்கு இதுவே சரியான சாட்சியாக, சான்றாக அமையும்.
இங்கு பேசிய காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழக அரசின் சாதனைகளை பற்றி கூறினார்கள். சாதனை திட்டங்களால் தொகுதிகளுக்கு செல்வதற்கு தெம்பும், தைரியமும் இருக்கிறது, மக்கள் எங்களை இன்முகத்தோடு வரவேற்கிறார்கள் என்றார்.
பெண்கள்-அதிகாரிகள் வாக்குவாதம்
முன்னதாக, துணை முதல்வர் கலந்து கொண்ட விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் பெண்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விழாவி்ல் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட இருப்பதாக நெல்லை மேற்கு மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் வேன், பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். மதியம் 2 மணிக்கே ஏராளமான பெண்கள் பச்சிளம் குழந்தைகளோடு காத்திருந்தனர். விழா இரவு ஓன்பதரை மணிக்கு நடந்து முடிந்தது.
ஆனால் அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு உதவி தொகைக்கான காசோலைகள் வழங்கப்படாததால் நூற்றுக்கணக்கான பெண்கள் மேடையின் முன்பு திரண்டு அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
பலர் குழந்தைகளுக்கு சாப்பாடு, பால் கூட கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு காசோலைகளை வாங்கியும், தங்கள் பகுதிக்கு ஆட்டோக்கள் மூலம் புறப்பட்டு சென்றனர். துணை முதல்வர் விழாவுக்கு அழைத்து வந்த அதிகாரிகள் திட்ட பயணாளிகளை அம்போ என்று விட்டு சென்ற சம்பவம் பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக மனு கொடுக்க வந்த பொதுமக்களை மனு கொடுக்க விடாமல் பலர் தடுத்தனர். இதை கவனித்த துணை முதல்வர் மேடையின் தென்பகுதிக்கு தானாகவே சென்று பொதுமக்களிடம் நேரிடையாக மனுக்களை வாங்கினார். துணை முதல்வரின் இந்த திடீர் செயல் அதிகாரிகளை அதிர்ச்சியிலும், பொதுமக்களை மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது