'தேடப்படும் குற்றவாளி' என்பதை ரத்து செய்ய கோரும் டக்ளஸ் தேவானந்தா!
சென்னை: தமிழக போலீஸாரால் தேடப்படும் குற்றவாளி என்பதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
இலங்கை கொழும்புவை சேர்ந்தவர் டக்ளஸ் தேவானந்தா. 1980களில் ஈழ புரட்சி மாணவர் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். நாளடைவில் பத்மநாபாவுடன் கை கோர்த்த அவர் ஈழ மக்கள் விடுதலை புரட்சி முன்னணியில் தன்னை இணைத்துக் கொண்டார். பிறகு ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார். அதை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்ற அரசியல் கட்சியாக மாற்றினார்.
சிங்கள அரசு இவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்தும், இவர் அரசுக்கு ஆதரவாக மாறினார். விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் செயல்பட்டார்.
இலங்கையில் தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற பயத்தில் 1986ல் சென்னை வந்து சூளை மேட்டில் தங்கி இருந்தார். அப்போது அவருக்கும், பொது மக்களுக்கும் மோதல் ஏற்பட்டது. டக்ளஸ் ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்து சுட்டதில் திருநாவுக்கரசு என்ற வக்கீல் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சூளைமேடு போலீஸ் நிலையத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது. 1989-ல் கீழ்ப்பாக் கத்தை சேர்ந்த ஒரு வைர வியாபாரியைக் கடத்தி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா மீது கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் வழக்கு உள்ளது.
அது போல 1990ல் வளவன் என்பவரை கடத்தி மிரட்டி பணம் பறித்ததாக கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை, கொலை மிரட்டல், கலவரம் செய்தல், பொதுமக்களை துப்பாக்கியை காட்டி மிரட்டுதல் ஆகிய வழக்கு விசாரணை சென்னை கூடுதல் 6-வது செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
1987-ம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தம் காரணமாக பலர் பொது மன்னிப்பு பெற்று திரும்பினார்கள். அப்போது டக்ளசுக்கும் மன்னிப்பு கொடுக்கப்பட்டதாக அவரே கூறி வருகிறார். ஆனால் அவர் மன்னிக்கப்பட்டதாக இந்திய அரசு அறிவிக்கவில்லை. அதுபற்றி தமிழக அரசுக்கும் தகவல் ஏதும் அனுப்பப்படவில்லை. ஆனால் தான் மன்னிக்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து கூறி வந்ததால், டக்ளசுக்கு நிபந்தனைன ஜாமீன் கொடுத்தது உயர்நீதிமன்றம்.
இதைப் பயன்படுத்தி டக்ளஸ் இலங்கைக்குச் சென்றுவிட்டார். அங்கு சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்காக அவர் ஒரு தடவை கூட ஆஜராகவில்லை. எந்த மனுவும் தாக்கல் செய்ய வில்லை.
இதனால் டக்ளசை தேடப்படும் குற்றவாளியாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய சர்வதேச போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயல்பட உதவியதற்கு பரிசாக டக்ளஸ் தேவானந்தாவுக்கு மந்திரி பதவியை ராஜபக்சே கொடுத்தார். தற்போது இலங்கையின் பாரம்பரிய சிறு தொழில் துறை மந்திரியாக டக்ளஸ் உள்ளார். கடந்த ஜூன் மாதம் அவர் ராஜபக்சேயுடன் 4 நாள் பயணமாக டெல்லி வந்தார்.
அவர் தேடப்படும் குற்றவாளி என்பதால் உடனே அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். ஆனால் டக்ளசை கைது செய்யும் விஷயத்தில் டெல்லி போலீசார் எந்த அக்கறையும் காட்டவில்லை.
இதன் காரணமாக டக்ளஸ் தேவானந்தா எனும் தேடப்படும் கொலை, கொள்ளைக் குற்றவாளி பிரதமர் மன்மோகன் சிங்குடன் கைகுலுக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு எளிதாக கொழும்பு திரும்பிச் செல்ல முடிந்தது.
இந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். ராஜா என்ற வக்கீல் மூலம் அவர் அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி என்னை விடுதலை செய்தனர். என் மீதான குற்றச்சாட்டுக்களும் விடுவிக்கப்பட்டன. எனவே தான் நான் கொழும்பு திரும்பிச் சென்றேன்.
தற்போது கோர்ட்டில் என் மீது நிலுவையில் உள்ள விசாரணைகளை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளேன். நான் இலங்கையில் மந்திரியாக இருப்பதால் என் மீதான 'தேடப்படும் குற்றவாளி' என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
என் மீதான கிரிமினல் வழக்குகளை கைவிட வேண்டும், எந்த விசாரணைக்கும் நான் ஒத்துழைக்கத் தயாராக உள்ளேன்...," என்று கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி சி.டி. செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.
டக்ளஸ் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுக்களில் இரண்டு வழக்குகள், 187 இந்தியா-இலங்கை ஒப்பந்தத்துக்கு பிறகு பதிவானவை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications