மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது-தலைமை தேர்தல் ஆணையர்
திருவனந்தபுரம்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ளார்.
மத்திய தலைமை தேர்தல் ஆணையர் குரோஷி நேற்று திருவனந்தபுரம் வந்தார். அடுத்த வருடம் கேரளாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கேரளாவில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் தயாராகிவிட்டது. வாக்காளர் அடையாள அட்டையும் அனைவருக்கும் வழங்கப்பட்டு வி்ட்டது.
ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்பும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு உடனடியாக வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்படும்.
மின்னணு வாக்கு பதிவு எந்திரம் நம்பகத்தன்மை கொண்டதாகும். இதில் எந்த முறைகேடும் செய்ய முடியாது. கேரளாவில் அடுத்த வருடம் மே மாதம் தேர்தல் நடைபெறும் என்றார்.
இதற்கிடையே, கேரளாவில் தேர்தல் கமிஷன் சார்பில் கால் சென்டர் தொடங்கப்பட்டுள்ளது. 04713912344 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் வாக்காளர்களுக்கு தேவையான விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.