வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை-10 மாவட்டங்களுக்கு விடுமுறை
இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையை ஒட்டிய நிலையில் ஏற்கனவே இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன்தினம் மறைந்துவிட்டது. தற்போது புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை, இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலிலிருந்து இருந்து தெற்கு ஆந்திராவையொட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் வரை பரவி உள்ளது.
இதன்காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் பலத்தமழை பெய்யும். இடியுடன் கூடிய மழையும் காணப்படும்.
உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழைபெய்யும். சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாகவே இருக்கும்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின்போது சராசரியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பெய்யவேண்டியதில் 5 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் சராசரி அளவுபெய்துள்ளது. சில மாவட்டங்களில் சராசரியைவிட அதிகமாகவும் பெய்துள்ளது.
தற்போது அந்த 5 மாவட்டங்கள் இரு மாவட்டங்களாக குறைந்துவிட்டன. சென்னை திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தான் சராசரியை விட மழை அளவு அதிக குறைவாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
கன மழை பெய்யும்:
இந்தப் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கன மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கரூர், திருச்சி, மற்றும் கடலூர், விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஓட்டப்பிடாரம் பகுதியில் விடிய விடிய கனமழை:
இதற்கிடையே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் இரவு நேர மழை அதிக அளவில் உள்ளது.
நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமேஸ்வரம், செங்கோட்டை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. மதுரையில் தொடர்நது விட்டு விட்டு இரவு நேர மழை பெய்து வருகிறது.
ஓட்டப்பிடாரத்தில் விடிய விடிய மழை: 15 கிராமங்கள் துண்டிப்பு
ஓட்டப்பிடாரம் பகுதியில் நேற்று முன்தினம் விடிய விடிய மழை பெய்தது. இதனால் மழை நீர் புகுந்து 15 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வடபகுதியில் கனமழை கொட்டுகிறது. ஓட்டப்பி்டாரம், எப்போதும்வென்றான், மணியாச்சி, விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
ஓட்டப்பிடாரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பிடித்த மழை அதிகாலை 4 மணி வரை கொட்டித் தீர்த்தது. இதனால் மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்த தண்ணீர் ஜெகவீரபாண்டியபுரம் உள்ளிட்ட 15 கிராமங்களில் புகுந்தது.
கிராமங்களைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் பொதுமக்களால் வெளியே வரமுடியவில்லை. புதூர் பாண்டியபுரம் தண்ணீரில் மிதக்கிறது. ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திலும் தண்ணீர் புகுந்தது.
பிரதான குளமான பெரியகுளம் கண்மாய் தென்கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மணல் மூட்டைகளை அடுக்கி அதை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில்:
தலைநகர் சென்னையில் நேற்று இரவு பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்தது. காலையிலிருந்து மேக மூட்டமாக காணப்படுகிறது. இந்த நிலையில் பிற்பகலில் கன மழை பெய்யத் தொடங்கி சென்னை நகரை குளிர வைத்துக் கொண்டிருக்கிறது.