சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா?-மனைவி கண்ணீர் மனு
கடையநல்லூர்: சவுதி அரேபியாவில் வேலை பார்த்த தமிழர் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியாமல் அவர் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூர் அம்மன்கோவில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராமையா. அவருடைய மகன் முருகையா. இவருக்கும் கடையநல்லூர் அருகே உள்ள சுப்பையா மகள் உத்தமி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரவீன்குமார், சுவாஷி என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
முருகையா கடந்த 2008-ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு தனியார் நிறுவன டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அலுவலகத்தில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது வாரம் ஒருமுறை வீட்டில் உள்ள தனது மனைவி குழந்தைகளிடம் டெலிபோனில் பேசுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி இரவு 7 மணிக்கு முருகையாவின் செல்போனில் இருந்து அவருடைய மாமனார் சுப்பையா போனுக்கு மர்ம அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர் முருகையா திடீர் என தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார். அதுகுறித்து கூடுதல் விபரம் கேட்டபோது சரியான பதில் கூறாமல் போனை வைத்து விட்டார்.
இதனால் முருகையாவின் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். போனில் பேசியவர் பதில் ஏதும் கூறாமல் போனை வைத்ததால் அது பொய்யான தகவலாக இருக்கும் என்று நம்பினார். இருந்தாலும் முருகையா மறுபடியும் வீட்டுக்கு போன் செய்து பேசுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
ஆனால் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வராத நிலையில் முருகையா வேலை செய்த கம்பெனியை அவரது குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது முருகையாவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மேலும் அதிரிச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முருகையாவின் மாமனார் சுப்பையா தனது மருமகன் கதி என்ன என்றும், அவரை கண்டுபிடித்து தரக்கோரியும் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி நெல்லை கலெக்டரிடம் மனு கொடுத்தார். ஆனால் இதுகுறித்து எவ்வித முன்னேற்ற நடவடிக்கையும் இல்லை எனத் தெரிகிறது.