டிச. 21ல் சந்திர கிரகணம்: கடந்த 3 ஆண்டுகளில் முதல் சந்திர கிரகணம்
பாரிஸ்: வரும் செவ்வாய்கிழமை சந்திர கிரகணம் ஏற்படப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தான் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்படும் முதல் சந்திர கிரகணம் ஆகும்.
வரும் செவ்வாய்கிழமை அதிகாலையில் வானம் மேகமூட்டமின்றி இருந்தால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்கள் நிலா ரோஸ், செம்பு அல்லது ரத்த சிவப்பு நிறத்தில் இருப்பதைக் காணலாம்.
சூரியன், பூமி மற்றும் நிலா ஒரே கோட்டில் வருவதால் இந்த கிரகணம் ஏற்படுகின்றது. இதனால் நிலவு மறையாது. ஆனால் அதன் பிம்பம் நம் பூமியை நோக்கி வருவதால் இங்கிருந்து பார்ப்பவர்களுக்கு நிலா ரத்த சிவப்பு, செம்பு, ஆரஞ்சு மற்றும் காப்பி கலரில் தெரியும்.
இது குறித்து நாசாவின் கிரகண நிபுணர் பிரெட் எஸ்பெனக் கூறியதாவது,
இந்த கிரகணம் வட அமெரிக்கா, கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்தில் நன்றாகத் தெரியும். மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவர்களுக்கு இது செவ்வாய்கிழமை காலையை விட திங்கட்கிழமை மாலை முதலே நன்றாகத் தெரியத் துவங்கும்.
மேற்கு ஐரோப்பாவில் நிலவு மறையும் முன் கிரகணத்தின் ஆரம்பம் தெரியும். மேற்கு ஆசியாவில் நிலவு வரும்போது கிரகணத்தின் இறுதி நிலை தெரியும் என்றார்.
இந்த சந்திர கிரகணம் சுமார் 3 மணி நேரம் இருக்கும்.