காங். கூட்டணி வேண்டாம் என்று நான் சொல்லவில்லை-மமதா பல்டி
முன்னதாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி,
மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகளை அடக்க மத்திய படை வந்தது. ஆனால் இங்கிருக்கும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் அதை எங்கள் கட்சியினருக்கு எதிராக தவறாக பயன்படுத்துகின்றனர். இதனால் எங்கள் கட்சித் தொண்டர்கள் மீது அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததிலிருந்து தற்போது வரை எங்கள் கட்சி தொண்டர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் மத்திய படையால் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய படையை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை என்னால் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்.
இது குறித்து நான் பிரதமரையும், சோனியா காந்தியையும் நேரில் சந்தித்து புகார் அளித்தேன். என் கட்சித் தொண்டர்கள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை 20 முறை சந்தித்து புகார் கொடுத்துள்ளனர். மேலும், மேற்கு வங்க மாநில ஆளுநர் எம்.கே. நாராயணனும் இது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இத்தனை பேர் முயற்சியும் வீனாகப்போனது.
இதே நிலை தொடரும் பட்சத்தில் நான் என் அமைச்சர் பதவியைத் தூக்கி எறியப் போகிறேன். மேலும், வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் அவசியமும் எங்களுக்கு இல்லை. நாங்கள் தேர்தலை தனித்து நின்று சந்திக்க தயார் என்று கூறியிருந்தார்.
இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தான் பேசியதை சில மணி நேரங்களிலேயே மறுத்து விட்டார் மமதா.
இதுகுறித்து அவர் விளக்குகையில்,இடதுசாரி மேற்கு வங்க அரசு, மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய அரசு அனுப்பிய படையினரை தவறாக பயன்படுத்துவது நிரூபிக்கப்பட்டால் உடனடியாக படைகளை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றுதான் நான் கூறினேன். ஆனால் நான் சொன்னது தவறாக வெளியாகி விட்டது, தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றார் மமதா.
மமதாவின் பேச்சுக்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகம்மது சலீம் கூறுகையில், என்னென்னவோ உளறுகிறார் மமதா. நான் உறுதியாக கூறுகிறேன், சட்டசபைத் தேர்தல் முடியும் ஒரு முடிவையும் எடுக்கப் போவதில்லை மமதா என்றார்.