லஷ்கர் இ தொய்பா தாக்குதல் அபாயம்-கர்நாடகத்தில் உச்சகட்ட உஷார் நிலை

குறிப்பாக கர்நாடக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் லஷ்கர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக நாடு தழுவிய எச்சரிக்கைத் தகவலையும் உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.
மும்பை, அகமதாபாத், கோவா, பெங்களூர் நகரங்கள் தீவிரவாதிகளின் பட்டியலில் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மும்பைக்குள் நான்கு லஷ்கர் தீவிரவாதிகள் ஊடுறுவியருப்பதாக சில நாட்களுக்கு முன்பு பரபரப்புத் தகவல் வெளியானது. அவர்களது புகைப்படங்கள், பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களைத் தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.
இதையடுத்து பெங்களூர் முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்குள்ள மிகப் பெரிய ஐடி நிறுவனங்கள் தாக்குதலுக்குள்ளாகலாம் என்று அஞ்சப்படுவதால் அவற்றுக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மும்பையில் வீடு வீடாக தேடும் பணிகளை பாதுகாப்புப் படையினர் முடுக்கி விட்டுள்ளனர். கடற்படையும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கமாண்டோப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்திலும் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பெங்களூரில் மத்திய அரசு அனுப்பிய 550 பேர் கொண்ட புற ராணுவப்படை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் போலீஸார் முழு விழிப்புணர்வுடன் வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுறுவியதாக இதுவரை தகவல் இல்லை. இருப்பினும் அனைத்துப் பகுதியிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள அனைத்து வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள், முக்கிய கட்டடங்கள் உள்ளிட்டவற்றுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேர கண்காணிப்பை கர்நாடக போலீஸார் மாநிலம் முழுவதும் மேற்கொண்டுள்ளனர். வாகனத் தணிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கெய்கா அணு மின் நிலையம், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவல்துறை முழு அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. எந்தவித சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் கர்நாடக காவல்துறையும், அரசும் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications