காமன்வெல்த் போட்டி ஊழல் ஆதாரங்களை அழித்ததாக கல்மாடி மீது வழக்கு தொடர சிபிஐ ஆலோசனை
காமன்வெல்த் போட்டி தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்த சில முக்கிய ஆவணங்கள் காணவில்லை என்று தெரிய வந்துள்ளது. இவற்றை அழித்திருக்கலாம் அல்லது மறைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது சந்தேகம் கல்மாடி மீது வந்து நிற்கிறது.
இதையடுத்து ஆதாரத்தை அழித்ததாக அவர் மீது வழக்கு தொடருவது குறித்து சிபிஐ ஆராய்ந்து வருகிறதாம். அவர் மீ்து ஐபிசி 201வது பிரிவின் (ஆதாரதத்தை வேண்டும் என்றே மறைத்தல் அல்லது குற்றவாளியை தப்புவிக்க தவறான தகவல் தருதல் என்ற குற்றச்சா) கீழ் வழக்கு தொடரப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வழக்கு தொடருவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது. பல்வேறு கோணங்களில் இதுதொடர்பாக ஆராய்ந்து வருகிறோம் என்றனர்.
டெண்டர்கள் விடப்பட்டது, பட்ஜெட் ஒதுக்கீடு, ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள் ஆகியவைதான் தற்போது காணாமல் போயுள்ளன.
விசாரணைக்கு ஆஜராக சிபிஐ உத்தரவு:
இதற்கிடையே காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சுரேஷ் கல்மாடிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து ஜனவரி 3ம் தேதி அவர் ஆஜராவார் என்று தகவல்கள் கூறுகின்றன.