சட்டசபை தேர்தல்-அரசு ஊழியர்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவு
நெல்லை: சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. உத்தேச பட்டியலை விரைவில் அனுப்பி வைக்குமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதையடுத்து சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் குரேஷி அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து சட்டப்பேரவைதேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.
தேர்தல் பணியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். இவர்களுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்கப்படும். ஓட்டுபதிவு செய்வது முதல் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் பயிற்சியின் போது உயர் அலுவலர்களால் விளக்கப்படும்.
சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை வாக்குபதிவு அலுவலர், வாக்குபதிவு அலுவலர் நிலை 1,2,3,4 ஆகிய 5 அலுவலர்கள் பணியாற்றுவர்.
இவர்களைத் தவிர வாக்குச்சாவடிகளை கண்காணிக்க மண்டல அலுவலர்களும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க மைக்ரோ அப்சர்வர்களாக மத்திய அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
தேர்தல் பணிக்கு 3.50 லட்சம் அரசு ஊழியர்கள் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்தல் பணியாற்ற உள்ள அரசு ஊழியர்கள் பட்டியலை தயாரிக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications