சென்ட்ரல் - திருவள்ளூர் மின்சார ரயில்கள் ரத்து: 41 சிறப்பு பேருந்துகள்!
சென்னை: சென்னை - திருவள்ளூர் இடையே மின்சார ரெயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 38 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கூட்டத்தைச் சமாளிக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 41 சிறப்பு பேருந்துகளை பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்குகிறது.
பிராட்வேயில் இருந்து திருவள்ளூருக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளன. திருவள்ளூர், ஆவடி, திருநின்றவூர், அம்பத்தூர் பகுதிகளை உள்ளடக்கி இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பிராட்வே- ஆவடி, ஆவடி- திருவள்ளூர், கோயம்பேடு- திருவள்ளூர், கோயம்பேடு- திருவள்ளூர், பூந்தமல்லி- திருவள்ளூர், அம்பத்தூர்- திருவள்ளூர் ஆகிய வழித் தடங்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தேவைப்படும் அளவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பாபு தெரிவித்தார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு வரை கூடுதல் பேருந்துகள் விடப்படுகின்றன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு போக்குவரத்து கழகம் கேட்டு கொண்டுள்ளது.