திமுகவில் சீட் கேட்டு விண்ணப்பித்தோருக்கு 8ம் தேதி முதல் நேர்காணல்
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், மார்ச் மாதம் 8ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ம் தேதிக்குள் விருப்ப மனு தாக்கல் செய்ய வேண்டும்
இதற்கிடையே, தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில்,
நடைபெறவிருக்கும் தமிழ்நாடு புதுவை மாநில சட்டப் பேரவை பொதுத்தேர் தலுக்கு கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 7ந் தேதி திங்கட்கிழமை வரை தலைமை கழகத்தில் விண்ணபித்திடலாம் என அறிவிக்கப்பட்டிருந்த தேதி மாற்றம் செய்யப்பட்டு 5ந் தேதி சனிக்கிழமைக்குள் விண்ணப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு புதுவை மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்ப கட்டணம்:
பொதுத் தொகுதி ரூ.5,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.2,500. வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும்.
விண்ணப்ப படிவம் தலைமை கழகத்தில் ரூ.500 வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
நேர் காணல் குழுவில் யார் யார்?:
முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட 9 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
நேர் காணல் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எப்போது?
நேர்காணலுக்கு வர வேண்டிய மாவட்டத்தினர் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் நாளான 8ம் தேதியன்று, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள்.
9ம் தேதி சிவகங்கை, மதுரை புறநகர், மதுரை மாநகர், நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர்.
10ம் தேதி புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர்.
11ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி.
12ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை.