தேர்தல் விதிமுறைகளை மீறியதாக புகார்: குமரியில் 43 அரசு பஸ்களில் அதிரடி சோதனை
நெல்லை: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 43 அரசுப் பேருந்துகளை ஆரல்வாய்மொழியில் நிறுத்தி தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
குமரி கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளராக இருந்தவர் பிசி முருகன். கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் தேமுதிக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையி்ல் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் சேர முடிவெடுத்த இவர் 3 ஆயிரம் தொண்டர்களுடன் 43 அரசுப் பேருந்துகளில் சென்னை சென்றார். தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசுப் பேருந்துகள் அனுப்பப்பட்ட சம்பவம் தேர்தல் விதிமுறையை மீறிய செயல் என்றும், திமுகவில் இணைந்த தொண்டர்களுக்கு அங்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், தேர்தல் கமிஷனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் கமிஷன் உத்தரவின்படி அதிகாரிகள் சென்னையில் இருந்து வந்த 43 அரசுப் பேருந்துகளையும் ஆரல்வாய்மொழியில் மடக்கி சோதனை போட்டனர்.
குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை சென்ற 43 அரசுப் பேருந்துகளின் எண்களை வைத்து குறிப்பி்ட்ட பேருந்தை நிறுத்தி இரண்டு பறக்கும்படை குழு அதிகாரிகள் சோதனையிட்டனர். நடத்துனர் மற்றும் ஓட்டுனர், பயணிகளிடம் பேருந்து எங்கிருந்து வருகிறது உள்ளிட்டவை குறித்து விசாரனை நடத்தினர். மேலும் தொண்டர்கள் வைத்திருந்த பைகள் உள்பட அனைத்து பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பண பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications