மார்ச் 15 முதல் ஜெ.பிரசாரம்-வேனிலேயே பயணம், ஹெலிகாப்டர் இல்லை!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்குத் தயாராகி விட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. வருகிற 15ம் தேதி தனது பிரசாரத்தை தொடங்கும் அவர் 28 நாட்களுக்கு பட்டி தொட்டியெங்கும் சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். கடந்த லோக்சபா தேர்தலின் போது ஹெலிகாப்டரில் பறந்த பறந்து பிரசாரம் செய்த ஜெயலலிதா இந்த முறை முழுக்க முழுக்க வேனிலேயே சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
அதிமுக தரப்பில் தேர்தல் தொடர்பாக நடந்து வரும் பணிகள் முழுமையாக தெரியாவிட்டாலும் கூட நடக்க வேண்டியவை அந்தந்த நேரத்தில் நடந்து வருகிறது. தொகுதிப் பங்கீட்டை அரைகுறையாக முடித்து வைத்துள்ள ஜெயலலிதா, தொகுதிகளை ஒதுக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இடையே அதிமுகவினரிடம் நேர்காணலிலும் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் பிரசாரத்திற்கும் அவர் தயாராகி விட்டார்.
வருகிற 15ம் தேதி முதல் அவர் தீவிரப் பிரசாரத்தில் குதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம் போல சென்னையிலிருந்து பிரசாரத்தைத் தொடரவுள்ளார் ஜெயலலிதா. சைதாப்பேட்டை, பல்லாவரம் தொகுதிகளில் அவர் பிரசாரத்தை தொடங்கி அப்படியே காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக தொடரவுள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில் ஹெலிகாப்டர் மூலம் சென்று பிரசாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வேனிலேயே பிரசராம் செய்யவுள்ளார் ஜெயலலிதா. இதற்காக நவீன வசதிகளுடன் கூடிய வேன் தயாராகி விட்டது.
கிராமம் கிராமாக சென்று வேனில் உட்கார்ந்தபடியே பேசவுள்ளார் ஜெயலலிதா. முக்கிய நகரங்களில் மட்டும் கூட்டங்களில் பேசுகிறார். ஸ்பெக்ட்ரம் பிரச்சினை, விலைவாசி உயர்வு, ஊழல் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்டவற்றை முன்னிலைப்படுத்தி ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
வழக்கமாக தேர்தல் பிரசாரத்தின் நிறைவாக ஏதாவது ஒரு முக்கிய நகரத்தில் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளும் பிரமாண்டக் கூட்டம் நடைபெறும். ஆனால் இம்முறை அது இடம் பெறாது என்று தெரிகிறது. இருப்பினும் கடைசி பிரசார நாளில் விஜயகாந்த் உள்ளிட்டோருடன் ஜெயலலிதாவை மேடையேற்ற வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.