இடதுசாரிகள்-மதிமுகவுடன் தொடர்ந்து இழுபறி-நேர்காணலில் குதித்தார் ஜெயலலிதா
திமுக கூட்டணியில் பெரும் பஞ்சாயத்துக்குப் பின்னர் தொகுதிப் பங்கீடு முடிவடைந்து தொகுதிகளை ஒதுக்கீடு செயயும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் அதிமுக முகாமில் குழப்பங்கள் தொடர்நது நீடித்து வருகின்றன.
தேமுதிகவுக்கு அதி வேகமாக சீட் ஒதுக்கி முடித்த ஜெயலலிதா, தன்னுடன் நீண்ட காலமாக இருந்து வரும் மதிமுக, இடதுசாரிகள் குறித்து இதுவரை பெரிய அளவில் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மாறாக அவர்களை இழுத்தடிக்க ஆரம்பித்துள்ளார். வேண்டாத விருந்தாளிகள் போல அவர்கள் நடத்தப்படுவதாக தெரிகிறது. இது அவர்களுக்குப் புரிந்திருந்தாலும் கூட வேறு வழியில்லாமல் அமைதி காத்து வருகின்றனர்.
நேற்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனை அதிமுக குழு சந்திப்பதாக இருந்தது. ஆனால் அதை திடீரென தள்ளிப் போட்டு விட்டனர். மேலும் மதிமுகவும் வருவதாக கூறப்பட்டது. வைகோவே வருவார் என்று செய்திகள் பரவின. இதனால் போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்கள் குவிந்தனர். ஆனால் யாரும் வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் கேட்டபோது எங்களுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. வந்தால்தான் போவோம் என்று கூறினர்.
இந்த இழுபறிக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இருப்பினும் சிபிஎம்முக்கு ஒதுக்கப்பட்டதைப் போல தங்களுக்கும் தொகுதிகள் தர வேண்டும் என சிபிஐ கோரி வருகிறதாம். அதேபோல மதிமுகவும் தங்களுக்குக் கெளரவமான முறையில் சீட் தரப்பட வேண்டும் என்று கோரி வருகிறதாம். இதனால்தான் ஜெயலலிதா இவர்களை இழுத்தடித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
இப்படி இழுபறிகளும், குழப்பங்களும் நீடித்து வரும் நிலையில், நேற்று மாலை திடீரென நேர்காணலில் குதித்தார் ஜெயலலிதா. அதிமுக சார்பில் சீட் கோரியவர்களிலிருந்து தொகுதிக்கு 3 பேரை தேர்வு செய்து (இந்தப் பட்டியலை ஏற்கனவே அவர் தேர்வு செய்து விட்டதாக முன்பே செய்திகள் கூறின என்பது நினைவிருக்கலாம்) இவர்களிடம் தற்போது நேர்காணலை தொடங்கியுள்ளார் ஜெயலலிதா.
முன்னதாக மாவட்ட செயலாளர்களுடனும் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். அவர்களிடம் யாரை வேட்பாளராகப் போடலாம், வெற்றி வாய்ப்பு எப்படி என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார் ஜெயலலிதா.