கேரள சட்டசபை தேர்தல்:காங்கிரசில் சீட் வாங்க தலைவர்கள் போட்டா போட்டி
கொல்லம்: கேரள சட்டசபை தேர்தலில் சீட் வாங்குவதற்கு காங்கிரஸ் கட்சியினருக்கிடையே போட்டா போட்டி நடக்கிறது.
கேரளாவில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த முறை ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னனி தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் சில கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு முரண்டு பிடித்து வருவது அக்கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே எந்தெந்த தொகுதியில் யார், யார் போட்டியிடுவது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இது தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு உத்தேச பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் உம்மன் சாண்டி தான் மீண்டும் முதல்வர் என முதலில் கூறப்பட்டது. ஆனால் மாநில தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே, காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வர் பதவிக்கு இவர்களுக்குள் கடும் போட்டி ஏற்படும் என கருதப்படுகிறது. சென்னிதலாவின் விருப்பத்துக்கு மேலிடமும் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
பொதுவாக கேரளாவில் காங்கிரஸ் மாநில தலைவராக இருப்பவர் சட்டசபைதேர்தலில் போட்டியிடுவது அரிதான ஒன்று. இதுவரை 3 பேர் மட்டுமே மாநில தலைவராக இருந்தபோது தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். கடைசியாக 1987-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைவராக இருந்த பத்மராஜன் போட்டியிட்டார். ரமேஷ் சென்னிதலா, உம்மன் சாண்டி போல் கூட்டணி அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கச்சன், முன்னாள் சபாநாயகர் சுதீசன், கருணாகரனின் மகன் முரளிதரன், அவருடைய தங்கை பத்மஜா ஆகியோரும் சீட் கேட்டுள்ளனர்.