14ம் தேதி குரேஷி வருகை: அனைத்து கட்சியினருடன் சந்திப்பு
சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி வரும் 14-ம் தேதி சென்னை வருகிறார். அவர் அனைத்து கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேசவிருக்கிறார். அவருடன் 2 தேர்தல் ஆணையர்களும் வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வந்தது.
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி வரும் 14-ம் தேதி சென்னை வருகிறார். அவருடன் இன்னும் 2 தேர்தல் ஆணையர்கள் வருகின்றனர். அவர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து தேர்தல், தேர்தல் விதிமுறைகள் குறித்து பேசுகிறார். அப்போது தேர்தல் விதிமுறைகளை அனைத்து கட்சிகளும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்துவார். மேலும், அவர் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளை சந்தித்து தேர்தல் ஏற்பாடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்.
இந் நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நிருபர்களிடம் பேசுகையில், அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களிடம் யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது வாக்குச்சாவடியில் உள்ள கேமரா மூலம் கண்டறியப்படும் என்று மிரட்டுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
வாக்குச்சாவடிகளில் நிகழ்வுகளை கண்காணிக்க மட்டுமே கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதை அறிய முடியாது. எனவே பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்.
பிரச்சாரத்தில் ஈடுபடும் தலைவர்கள் அதிகபட்சம் 10 வாகனங்களுடன் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய அலுவலத்துக்கு செல்லும்போது, அதிகபட்சமாக 5 பேரை அழைத்து வரலாம் என்றார்.