சட்டசபை தேர்தல் பணி: வீடியோ கேமிராமேன்கள் தேர்வு பணி தீவிரம்
நெல்லை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவை வீடியோ பதிவு செய்யும் வகையில் கேமராமேன்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஓட்டு பதிவின்போது முறைகேடுகள எதுவும் நடக்காத வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு தேர்தல் பார்வையாளர், 5 தொகுதிகளுக்கு ஒரு கணக்கு தேர்தல் பார்வையாளர் விரைவில் அந்தந்த மாவட்டத்துக்கு செல்கின்றனர். இவர்களுடன் வீடியோ கேமராமேன்களும் செல்கி்ன்றனர்.
மேலும் பதட்டமான வாக்குச் சாவடிகளில் காலை முதல் மாலை வரை ஓட்டுப் பதிவை வீடியோ எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வீடியோ கேமராமேன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தற்போது முதல்கட்டமாக தேர்தல் விதிமுறைகள் மீறல், தேர்தல் பார்வையாளர் ஆய்வு போன்றவற்றுக்காக வீடியோ கேமராமேன்கள் தேர்வு செய்ய்ப்படுகின்றர். நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் முதல்கட்டமாக 300க்கும் மேற்பட்ட வீடியோ கேமராமேன்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஒவ்வொரு கேமராமேன் பெயர், முகவரி, வீடியோ எடுக்க வேண்டிய பகுதி உள்பட பல்வேறு விபரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. ஓரிரு நாட்களில் இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பணியைத் துவங்குவர்.