லத்திகா உள்பட 3 போலீஸ் அதிகாரிகளை தேர்தல் பணியில் இருந்து நீக்குக: அதிமுக
சென்னை: தேர்தல் ஒழுங்காக நடக்க வேண்டும் என்றால் தமிழக டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்ட 3 போலீஸ் உயர் அதிகாரிகளை தேர்தல் பணியில் இருந்து உடனடியாக விலக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை அதிமுக வலியுறுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தல் குறித்து அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி நேற்று சென்னையில் சந்தித்து பேசினார்.
இதில் அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், மைத்ரேயன், டி.ஜெயக்குமார், மனோஜ்பாண்டியன், பாலகங்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
டிஜிபி லத்திகா சரண் சென்னை மாநகராட்சித் தேர்தலின்போது நடந்த பல்வேறு முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்தார். இது தவிர தற்போது ஏ.டி.ஜி.பி.யாக உள்ள ஜாஃபர் சேட், எஸ்.பி. சந்திரசேகர் ஆகியோர் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுமாறு காவல் துறை அதிகாரிகளை அச்சுறுத்துகின்றனர்.
எனவே, தேர்தல் அமைதியாக நடக்க வேண்டும் என்றால் டிஜிபி லத்திகா உள்ளிட்ட இந்த மூவரையும் உடனே தேர்தல் பணியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.
2-ஜி ஸ்பெக்ட்ரம், மணல் கொள்ளை போன்றவற்றின் மூலம் கிடைத்த பணத்தை திமுகவினர் பதுக்கி வைத்துள்ளனர். அதை பறிமுதல் செய்ய வேண்டும்.
திமுக அணியைச் சேர்ந்தவர்களே சென்னையில் மண்டலக் குழுத் தலைவர்களாக உள்ளனர். அவர்களது அலுவலகங்களில் புகைப்படங்களுடன் கூடிய ஏராளமான வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. அவற்றை வாக்காளர்களுக்கு வழங்காமல் தடுத்து நிறுத்துகின்றனர். எனவே அந்த அலுவலகங்களுக்கு அதன் தலைவர்களும் கவுன்சிலர்களும் செல்வதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளோம் என்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் கூறியதாவது,
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் ரூ. 12 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை மிகக் குறைவு. ஆளும் கட்சி சார்பில் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரை செலவு செய்யத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு வேட்பாளருக்கே இவ்வளவு பெரிய தொகை என்றால் மொத்தம் எவ்வளவு பணம் புழங்கும்?
சென்னை சிறையில் உள்ள தொழில்முறை குற்றவாளிகளை விடுவித்து தேர்தலை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக அஞ்சுகிறோம். தேர்தல் நடத்தை நெறிமுறைகளைக் காரணம் காட்டி வழக்கமான தேர்தல் பிரசாரத்தை தடை செய்யக்கூடாது.
திருமங்கலம் இடைத் தேர்தலுக்குப் பிறகு வாக்காளர்களை திருமண மண்டபங்களில் தங்க வைத்து அவர்களை ஒட்டுமொத்தமாக வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்து வாக்களிக்கச் செய்வது அதிகரித்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உதவிச் செயலாளர் ஜி.பழனிச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் வீரபாண்டியன் ஆகியோர் கூறியதாவது,
தேர்தலில் 65 முதல் 75 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். தூரத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் ஆணையமே வாகனங்களை ஏற்பாடு செய்து வாக்காளர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்க 2 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தோம். அது குறித்து ஆவன செய்வதாக தேர்தல் ஆணையர் உறுதியளித்துள்ளார் என்றனர்.