தமிழகம் முழுவதும் திடீர் மின்தடை: சரிசெய்ய ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: 1400 மெகாவாட் மின் பற்றாக்குறை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்த இரு தினங்களில் சரி செய்துவிடுவோம் என்று தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தென்மண்டல மின் தொகுப்பின் மின் உற்பத்தியில் 1400 மெகாவாட் அளவிற்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதால் தென்மண்டல மின் தொகுப்பு அதிர்வு எண்ணில் இறக்கம் ஏற்பட்டது.
அதனால் தமிழ்நாட்டில் உள்ள பி.பி.என். (330 மெ.வா.), அபான் (113மெ.வா.), நெய்வேலி பிரிவு-2, ராமகுண்டம் பிரிவு-2, கைகா ஆகிய நிலையங்களில் தலா ஒரு அலகில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத தடங்கலால் ஏறக்குறைய 700 மெகாவாட் அளவிற்கு தமிழகத்தின் பங்கில் ஆக மொத்தம் 1400 மெ.வா. அளவிற்கு கடந்த சில தினங்களாக இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மின் நிலையங்கள் நாளை (24-ந் தேதி) உற்பத்தி தொடங்கும்.
தென்னக மின்தொகுப்பு குறைந்த அதிர்வு எண்ணில் இயங்குவதால் காடம்பாறை மின்னேற்று உற்பத்தி நிலையத்தில் உள்ள நான்கு 100 மெ.வா. இயந்திரங்களை பம்ப் நிலையில் இயக்க இயலவில்லை. எனவே பகல் நேரங்களில் 400 மெ.வா. மின் உற்பத்தி செய்ய இயலாத சூழ்நிலையில் பகல் மற்றும் உச்ச மின் தேவை நேரங்களில் மின் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை.
பொதுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அறிவிக்கப்பட்ட மின் கட்டுப்பாட்டு முறையின் மூலம் கிடைக்கும் நிவாரணம் பகலில் முழுமையாக கிடைக்கவில்லை.
மின்தடை அதிகரிப்பு:
இந்த எதிர்பாராத மின் இழப்புகள் இருந்தபோதிலும், தேவைப்படும் மின்சாரத்தை நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், வெளிச் சந்தையிலிருந்தும் பெற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
பிற மாநிலங்களிலுள்ள மத்திய அரசின் மின் நிலையங்களில் இருந்து உபரி மின்சாரத்தை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவை அனைத்தும் உறுதியான தீர்வுகள் அல்ல. தமிழகத்திற்கு மத்திய மின் பங்கீட்டில் இருந்து குறைந்தபட்சம் 1000 மெ.வா. மின்சாரம் கிடைக்க வாரியம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
தென் மாநிலங்கள் இணைந்த மின் கட்டமைப்பை பெங்களூரில் உள்ள தென்மண்டல மின் அனுப்புகை மையம் கண்காணித்து இயக்கி வருகிறது. மின் கட்டமைப்பின் அதிர்வு எண் குறையும்போது இந்த நிறுவனம் மின் கட்டமைப்பின் பாதுகாப்பிற்காக தற்காலிகமாக தேவைக்கேற்ப மின் தடை செய்கிறது. இதனால் சில பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடை நேரம் அதிகமாகி உள்ளது.
அடுத்த 2 நாட்களில் சரியாகிவிடும்...
24-ந் தேதி மின் உற்பத்தி இயல்பு நிலை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அறிவிக்கப்பட்ட மின் விநியோகம் 24-ந் தேதி அல்லது அதிகபட்சமாக 25-ந் தேதி சீரடையும். எனவே மின் நுகர்வோர்கள் இந்நிலையை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.