களக்காடு அருகே இரண்டாவது நாளாக காட்டு தீ: மக்கள் பீதி
களக்காடு: களக்காடு அருகே உள்ள மலையில் நேற்று இரண்டாவது நாளாக காட்டுத் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அங்குள்ள கிராமங்களில்ல சாம்பல் படிந்துள்ளது.
களக்காடு அருகே உள்ள கள்ளிகுளம் கிராமப் பகுதியையொட்டி உள்ள பிரண்ட மலையில் நேற்று முன்தினம் மாலை காட்டுத் தீ ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. நேற்று இரண்டாவது நாளாக தீ கொளுந்து விட்டு எரிந்தது. மலையின் கீழ்புறம் பிடித்த தீ உச்சி வரை பரவியது. இதனால் பல ஏக்கர் பகுதியில் உள்ள சிறிய மரங்கள், மூலிகைகள் கருகின.
பிரண்ட மலையில் சுக்குநாரி புற்கள் அதிகம் உள்ளன. இந்த புற்களில் எண்ணெய் பசை இருப்பதால் தீ கொளுந்து விட்டு எரிவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். பயங்கர சத்தத்துடன் தீ எரிவதால் அருகில் உள்ள பெருமாள்குளம், கள்ளிகுளம், துவரைகுளம், பொத்தை சுத்தி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
மேலும், தீயில் கருகிய செடி கொடிகளின் சாம்பல் காற்றில் அடித்து வரப்பட்டு கிராமப்புறங்கில் படிந்து வருகின்றன.