நில மோசடி வழக்கில் மாஜி திமுக எம்எல்ஏ புரசை ரங்கநாதன் திடீர் கைது
சென்னை: வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ புரசை ரங்கநாதன் இன்று அதிகாலையில் திடீரென கைது செய்யப்பட்டார்.
நில மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தவிர அவரது உதவியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட 5 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரிக்கப்படாத வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏவாக இருந்தவர் ரங்கநாதன்.
இவரை இன்று அதிகாலையில் போலீஸார் திடீரென கைது செய்தனர். அதிகாலையில் வீட்டுக்கு வந்த போலீஸ் படை, ரங்கநாதனைக் கைது செய்து அழைத்துச் சென்றது.
கைது செய்யப்பட்ட ரங்கநாதனை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரங்கநாதன் ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தார். பின்னர் தமிழ் மாநில காங்கிரஸில் சேர்ந்தார். பின்னர் தனி அமைப்பை நடத்தி வந்தார். கடைசியாக திமுகவுக்கு வந்து சேர்ந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது நினைவிருக்கலாம்.