திராவிடக் கட்சிகளை ஒழித்து விட்டுத்தான் மறு வேலை- டாக்டர் ராமதாஸ் பேச்சு
திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை முதல் வேலையாக கொண்ட கட்சி பாமக. ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டணி வைத்து புதிய சாதனை படைத்த கட்சி இது. இந்த நிலையில் திராவிடக் கட்சிகள்தான் தமிழ்நாட்டை சீரழித்து விட்டன. எனவே அதை ஒழிப்பதுதான் பாமகவின் முதல்வேலைஎன்று பேசியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
வேலூர் சத்துவாச்சாரியில் நடந்த பாமக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதுதான் இப்படிக் கூறினார் ராமதாஸ். அவர் பேசுகையில்,
மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை வரவேற்பதற்காக இந்த மாவட்ட கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. பா.ம.க, திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்கிற நிலைபாட்டை நடுநிலையாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்த முடிவில் இருந்து எப்போதும் பின்வாங்க மாட்டோம். கடல், மேகம் அழியாத வரை இந்த முடிவில் உறுதியாக இருப்போம். 1967ல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. அப்போது காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக திராவிட கட்சிகள் ஏற்படுத்தப்பட்டது.
அடைந்தால் திராவிட நாடு இல்லாவிட்டால் சுடுகாடு என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் தங்களது கொள் கைகளை சுடுகாட்டுக்கு அனுப்பி விட்டது. 48 ஆண்டுகளாக தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிப்பதே நமது வேலை அ.தி.மு.க.-தி.மு.கவில் உள்ளவர்கள் பா.ம.கவில் சேர தயாராக உள்ளனர்.
திராவிட கட்சிகள் இலவசங்களை தந்து பொது மக்களை ஏமாற்றினர், நிலங்கள் மனைகளாக மாற்றப்பட்டது. இதனால் விவசாயம் அழிந்தது. இதற்கெல்லாம் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகள் தான் காரணம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த தவறுகளை செய்யமாட்டோம் எந்த விதமான சமரசத்துக்கும் உடன்பட மாட்டோம்.
சமச்சீர் கல்விக்காக பா.ம.க. தொடர்ந்து போராடியது. முழுமையாக செயல்படுத்தாததால் அறைகுறையாக உள்ளது. திராவிட கட்சிகள் ஆட்சிக்காலத்தில் கல்வி கொள்ளையர்கள் அதிகரித்து விட்டனர்.
தமிழகத்தில் 1967க்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் 18 மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான் இருந்தன. ஆனால், இன்று 11,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன.
காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்வழிக் கல்விதான் இருந்தது. கல்விக் கொள்ளையர்களை அனுமதித்தது திராவிடக் கட்சிகள்தான். சாராயக் கடைகளைத் திறந்துவிட்டு சமூகம் கெடுவதற்கும், இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றியதற்கும், விவசாயம் பாழ்பட்டுப் போனதற்கும் காரணமான திராவிட கட்சிகளை அப்புறப்படுத்துவது வரலாற்றுக்கடமையாகும்.
சமச்சீர் கல்வியின் மீது தமிழக அரசுக்கு நம்பிக்கை இருந்தால் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் மட்டுமே இருக்கும் என்ற சட்டத்தைச் சட்டப்பேரவையின் இந்தக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர வேண்டும். மெட்ரிக்பள்ளிகள் சமச்சீர் கல்வியை ஏற்காமல் சி.பி.எஸ்.சி. தேர்வு முறை அல்லது வேறு கல்வி முறைக்கு மாறினால் பா.ம.க. சார்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும்.
சமச்சீர் கல்வியில் முழு வெற்றி கிடைக்கவில்லை. கருணாநிதி அரைகுறை சமச்சீர் கல்வியைத்தான் கொண்டு வந்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் மற்ற கட்சிகள் அப்புறப்படுத்தப்பட்டு பாமக மட்டுமே வெற்றி பெற வேண்டும். அனைத்து நிலையிலும் தலைகீழாக மாற்றப்பட்டுள்ள தமிழகத்தை மீட்கும் மீட்பராகப் பாமக வந்துள்ளது என்றார் ராமதாஸ்.