கூடுதல் கட்டணம்... துரைமுருகன் நடத்தும் கல்லூரிகள் மீது புகார்!

தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட கூடுதலாக பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதில் டெல்லி பாபு (மார்க்சிஸ்டு கம்யூ) பேசும்போது, வேலூரில் துரைமுருகன் நடத்தி வரும் என்ஜினீயரிங் கல்லூரியிலும் 92 ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்கிறார்கள் என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், "தமிழ்நாட்டில் 464 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கடந்த 1992-ல் சட்டம் கொண்டு வரப்பட்டது.
சுயநிதி கல்லூரிகளில் கல்வி கட்டணம் நிர்ணயிக்கும் குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே இந்த கல்லூரிகள் வசூலிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தற்போது 50 பொறியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் வரை 14 பொறியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்து உள்ளது.
வேலூரில் துரைமுருகன் நடத்தி வரும் பொறியியல் கல்லூரி மீதும் புகார் வந்துள்ளது. கடந்த ஆட்சியில் பெரும்பாலான அமைச்சர்கள் சேவை மனப்பான்மை இல்லாமல் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் பொறியியல் கல்லூரிகள் தொடங்கினர். தற்போது வந்துள்ள புகாரின் அடிப்படையில் எல்லா கல்லூரிகளிலும் ஆய்வு செய்வோம். அதிக கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
11 கல்லூரிகளில் முதல் தலைமுறை மாணவர்களிடமும் பணம் வசூலித்துள்ளனர். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முதல் தலைமுறையினரிடம் வசூலித்த பணத்தை திருப்பி தருவதாக கூறியுள்ளனர்," என்றார்.
சுகாதாரதுறை அமைச்சர் விஜய் கூறுகையில், "தமிழ்நாட்டில் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சுயநிதி கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் அதிகபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதில் கல்வி கட்டணம், கணினி, நூலகம், ஆய்வக கட்டணம் என அனைத்தும் அடங்கும்.
எனவே அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது புகார்கள் வந்தால் அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம். ஆனால் இதுவரை எந்த புகாரும் வரவில்லை," என்றார்.












Click it and Unblock the Notifications