மக்களின் நம்பிக்கையை ஜெயலலிதா பொய்யாக்கிவிட்டார்: ஈ.வி.கே.எஸ்.
சென்னை: மிக உறுதியான பெண்மணி என்ற மக்களின் நம்பிக்கையை முதல்வர் ஜெயலலிதா பொய்யாக்கி விட்டார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் பலியானபோது, அவருடன் சேர்ந்து பலியான குடும்பத்தினர் நீதி கேட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகம் பின்புறம் உண்ணாவிரதம் இருந்தனர். இவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்துக்கு, ராஜீவ் காந்தியுடன் கொலை செய்யப்பட்ட லீக் முனுசாமி என்பவரின் மகன் லீக் மோகன் தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தில் இளங்கோவன் பேசுகையில்,
ராஜீவ் காந்தியுடன் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ஆதரவாக நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் துணிச்சலுடன் கலந்து கொண்டுள்ளவர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். துணிச்சலுடன் என்று கூறுவது மிகவும் முக்கியமாகிறது.
சமீப நாள்களாக தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது ராஜீவ் காந்தியும் அவரோடு பலியானவர்களும் அநாதைகளோ என்று எண்ணத் தோன்றுகிறது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று நான் பேசியது பத்திரிகைகளில் வெளிவந்தது.
அதன் பிறகு எனக்கு மிரட்டல் விடுத்து 300க்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்தன. இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் யுவராஜாவுக்கும், ராஜீவ் காந்தியோடு பலியான குடும்பத்தினர் சிலருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டியே சாதிக்க வேண்டும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் எண்ணம் ஈடேறாது.
துரோகிகளை கண்டுபிடிக்கவே ஒரு மாதமாக காங்கிரஸ் பொறுத்திருந்தது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, அவரின் உடலை மூப்பனார் குனிந்து பார்த்ததை சீமான் மிகவும் கேவலமாக பேசினார்.
ராஜீவ் கொலையாளிகள் மூவரையும் சிறைக்குள் சென்று கொன்றிருக்க வேண்டும். அப்படி செய்யாததால் இன்று விடுதலை செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்றைக்கு தமிழகத்தில் நல்ல ஆட்சி நடக்கிறது. சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தவறு செய்தவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது.
ஆனால், தூக்கு தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் அந்த நம்பிக்கையை ஜெயலலிதா பொய்யாக்கி விட்டார்.
பேரவையில் அந்தத் தீர்மானம் வந்தபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி அதனை எதிர்ப்பதாக கையை உயர்த்தியபோதும், அதனை ஏற்காமல் ஒருமனதாக நிறைவேறியதாக அறிவித்துள்ளனர். ஜெயலலிதாவிடம் மீண்டும் சர்வாதிகாரத்தனம் தலைதூக்கியுள்ளதையே இது காட்டுகிறது. தமிழக சட்டமன்றத்தில் ஒரே நாளில் ஏன் இந்த மாறுபாடு?.
முன்னாள் முதல்வரைப் பற்றி நாம் பேசவேண்டியதில்லை. அவர் செல்லாக் காசாகிவிட்டார். செல்லாத காசு என்றால் அவர் பேசுவதும் செல்லா காசுதான். அவர் பேச்சை தமிழர்களும் நம்பவில்லை, சிங்களர்களும் நம்பவில்லை.
சீமான் போன்றவர்கள் பாராட்டி அடிக்கும் சுவரொட்டிகளைப் பார்த்து ஜெயலலிதா மயங்கி விடக்கூடாது. தமிழகத்தில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கினால் அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும்.
காங்கிரஸ்காரர்கள் யாருக்கும் பயந்தவர்கள் இல்லை. தேவைப்பட்டால் சிறை நிரப்பும் போராட்டத்தையும் நடத்துவோம். தீவிரவாதத்தை யாருமே ஆதரிக்கக் கூடாது. அது நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இங்கே குடும்பத்தினரை இழந்து உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கும் நாம் பொருளுதவி செய்ய தேவையில்லை. கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுதருவதே நமது கடமை என்றார் இளங்கோவன்.