மோடி ஒரு தீவிர மதவாதி, சஞ்சீவ் பட்டை காப்பாற்ற நான் தயார்: சாந்தி பூஷன்
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கலவரத்தை அடக்க மோடி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றம்சாட்டினார். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த மாதம் 13-ம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
குஜராத் கலவரத்தில் மோடிக்கு பங்கு உள்ளது என்றும், அதற்காக அவரை தண்டிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் மோடிக்கு எதிராக போதிய ஆதாராம் இல்லாததால் அவரை எதுவும் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கிடையே 21 ஆண்டுகளுக்கு முன்பு ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஜம்ஜோத்பூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ஒருவர் இறந்தார். அப்போது சஞ்சீவ் பட் அந்த மாவட்டத்தில் துணை கமிஷனராக இருந்தார். அதனால் விசாரணைக் கைதி இறந்தது குறித்து பட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோடி ஒரு தீவிர மதவாதி என்று அன்னா ஹஸாரே குழுவில் உள்ள சாந்தி பூஷன் தெரிவித்துள்ளார். பட் மட்டும் என்னை அணுகியிருந்தால் நான் அவருக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியிருப்பேன். இப்போதும் கூட நான் பட்டுக்காக வாதாடத் தயார் என்று அவர் மேலும் தெரிவி்த்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான பாஜகவின் பிரசாரம் குறி்த்து கேட்டதற்கு அவர் கூறியதாவது,
பாஜக தலைவர்களில் பலர் ஊழல்வாதிகளாக உள்ளனர். கர்நாடகாவில் பாஜகவைச் சேர்ந்த முதல்வருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் ஊழல் விவகாரத்தில் பாஜக எதுவும் பேசக்கூடாது என்றார் அவர்.
சாந்தி பூஷன் திடீரென இப்படி நரேந்திர மோடி மீது பாய்ந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், ஒருபக்கம் காங்கிரஸுக்கு எதிராக ஹிஸ்ஸார் இடைத் தேர்தலில் அன்னா குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி உள்ளிட்டோர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அது மறைமுகமாக பாஜகவுக்கே லாபமாக அமையும் என கருதப்படுகிறது. மறுபக்கம், சாந்தி பூஷன மோடி பாய்ந்துள்ளார். சமீபத்தில்தான் அன்னா ஹஸாரே மோடியை வெகுவாக புகழ்ந்து பேசியிருந்தார். குஜராத் மாநில வளர்ச்சிக்காக மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பாராட்டினார். ஆனால் தற்போது பூஷன் இப்படிப் பேசியிருப்பது அன்னா குழுவின் இரட்டை நிலையை அம்பலப்படுத்துவதாக உள்ளதாக கருதப்படுகிறது.