'புரட்சித் தலைவி', 'செம்மொழி நாயகன்' பெயரில் உறுதிமொழி ஏற்ற கவுன்சிலர்கள்!
சென்னை & நெல்லை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் தங்களது கட்சியின் தலைவர்கள் பெயரில் பதவியேற்க முயன்றனர். அவர்களை கமிஷனர் தடுத்து நிறுத்தினார்.
சென்னை மாநகராட்சி மேயர், வார்டு உறுப்பினர்களுக்கு கமிஷனர் கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உறுப்பினராக பதவியேற்பவர்கள் கடவுள் பெயரால் அல்லது உளப்பூர்வமாக என்று சொல்லி உறுதிமொழியேற்க வேண்டும்.
மேயராக சைதை துரைசாமி பதவியேற்றபோது கடவுள் அறிய என்று முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி கைகாட்டி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
2வது வார்டு அதிமுக கவுன்சிலர் செல்வம், கடவுள் பெயரால் என்பதற்கு பதிலாக காவல் தெய்வம், புரட்சித் தலைவி அம்மாவின் பெயரால் என்று உறுதி மொழியேற்றார். இதைக் கண்டு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைவரும் திகைத்தனர்.
கமிஷனரிடம் திரும்பிய முதல்வர், உறுப்பினரை கடவுள் பெயரால் என்று சொல்லி பதவியேற்கச் சொல்லுங்கள் என்றார்.
இதைத் தொடர்ந்து, கமிஷனர் கார்த்திகேயன் உறுப்பினர் செல்வத்திடம் கடவுள் பெயரால் என்று சொல்லி உறுதி மொழியேற்குமாறு கூற, அவர் கடவுள் பெயரால் என்று சொல்லி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
கருணாநிதி பெயரில் திமுக உறுப்பினர் பதவியேற்பு...:
திமுக உறுப்பினர் ஆண்ட்ரூஸ் தனது கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயராலும், காங்கிரஸ் உறுப்பினர் தமிழ்ச்செல்வன் தனது கட்சியின் தலைவர் சோனியா காந்தி பெயராலும் பதவியேற்க முயன்றனர்.
அப்போது அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதையடுத்து கமிஷனர் கார்த்திகேயன் தலையிட்டு உளப்பூர்வமாக என்று சொல்லச் சொல்லி அந்த உறுப்பினர்களை 2வது முறையாக பதவியேற்க வைத்தார்.
ஆனாலும் ஒரு சில கவுன்சிலர்கள் தொடர்ந்து கட்சி தலைவர்கள் பெயரால் பதவியேற்க முயன்றனர். இதனால் கடுப்பான கமிஷனர் கடவுள் பெயரால் அல்லது உளப்பூர்வமாக என்று சொல்லாமல் பதவியேற்றால் பதவியேற்பு சரியானதாக இருக்காது. நான் தேர்தல் அதிகாரி. முறையாக உறுதிமொழி ஏற்காவிட்டால் நீங்கள் பதவியேற்றதே செல்லாது என்று என்னால் சொல்ல முடியும் என்று எச்சரித்தார்.
இதையடுத்தே மற்றவர்கள் முறையாக உறுதி மொழியேற்றனர்.
நெல்லையிலும் இதே கூத்து....:
திருநெல்வேலி மாநகராட்சி உறுப்பினராக பதவியேற்ற கவுன்சிலர்கள் சிலர் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் பெயரில் பதவியேற்றுக் கொண்டனர்.
16வது வார்டு உறுப்பினர் கிறிஸ்துராஜன் உள்ளிட்ட சில அதிமுக கவுன்சிலர்கள், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மீது ஆணையிட்டு உறுதிமொழி ஏறகிறேன் என்றனர்.
அடுத்து வந்த 22வது வார்டு கவுன்சிலர் கமாலுதீன், செம்மொழி நாயகன் டாக்டர் கலைஞர் மீது ஆணையிட்டு உறுதிமொழி ஏற்கிறேன் என்றார்.
23வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் உமாபதி சிவன், அன்னை சோனியா காந்தி மற்றும் வார்டு மக்கள் மீது ஆணையிட்டு கடவுள் பெயரில் உறுதிமொழி ஏற்றார்.
46வது வார்டு பாஜக கவுன்சிலர் அழகு ராஜா, அத்வானி மீது ஆணையிட்டு பதவி ஏற்றார்.ஏற்பதாக உறுதிமொழி ஏற்றார். இன்னும் சில அதிமுக உறுப்பினர்களும் முதல்வர் பெயரில் ஆணையிட்டு பதவி ஏற்பதாக உறுதிமொழி ஏற்றனர்.












Click it and Unblock the Notifications