ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் குறித்து தனி விசாரணை: பாக். கிரிக்கெட் வாரியம் முடிவு
லாகூர்: ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தண்டனை விதிக்கப்பட்ட 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு சூதாட்டத்தில் இருந்த தொடர்பு குறித்து விசாரிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சாகா அஷ்ரப் கூறியதாவது, பாகிஸ்தான் அணியின் ஊழல் தடுப்புக் குழு இங்கிலாந்தில் இருந்த போது பாகிஸ்தான் வீரர்கள் எப்படி சூதாட்த்தில் ஈடுபட்டார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் தற்போது, ஊழல் தடுப்புக் குழுவினர் மீது நடவடிக்கை எடுப்பது தவறு. லண்டன் நீதிமன்றத்தின் முழு தீர்ப்பும் வெளியான பிறகு விசாரணை துவங்கும். இந்த வழக்கு தொடர்பான காரணம் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை குறித்து முதலில் விசாரிக்க வேண்டியுள்ளது.
கிரிக்கெட் ஊழலுக்கு எதிராக போராடும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முழு ஆதரவை அளிக்கும் என்பதை தெரிவிக்கும் கடிதத்தை விரைவில் அனுப்பப்படும், என்றார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த சூதாட்டத்தில் வீரர்களுக்கு தொடர்பு ஏற்பட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் அதிகாரிகளும் ஒரு காரணம் என முன்னாள் வீரர்கள் குற்றசாட்டியுள்ளனர். கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் உதவியுடன் சூதாட்ட புரோக்கர் மசார் மஜீத், பாகிஸ்தான் வீரர்களுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மோயின் கான் கூறியதாவது, சூதாட்டம் நடந்த போது ஊழல் தடுப்பு குழுவினர் என்ன செய்து கொண்டிருந்தனர் என தெரியவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் மசார் மஜீத் தங்குவதற்கு அந்த குழுவினர் தடுக்கவில்லை, என்றார்.
சூதாட்ட புரோக்கர் மசார் மஜீத்துக்கு மற்ற பாகிஸ்தான் பாகிஸ்தான் வீரர்களுடன் தொடர்பு இருக்கலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சந்தேகப்படுவதாக தெரிகிறது.