ஒடிசா முதல்வரின் சொத்து மதிப்பு ரூ. 12 கோடி-அமைச்சரவையில் 12 பேர் கோடீஸ்வரர்கள்
புவனேஸ்வர்: ஒடிசா (முன்னாள் ஒரிசா) மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் சொத்து மதிப்பு ரூ. 12 கோடி என அம்மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 22 பேரில் 12 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பு வகித்து வரும் நவீன் பட்நாயக் மாநிலத்தில் ஊழலற்ற, ஏழைகளுக்கு நலம்தரும் திட்டங்களைச் செயல்படுத்தி மக்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார். அவர் மூன்று முறை தொடர்ந்து வெற்றிபெற இதுவே வழி வகுத்தது.
முதலமைச்சராக பதவி வகிக்கும் முன்பு மிகச்சிறந்த எழுத்தாளராக இருந்த நவீன் பட்நாயக் முந்தைய ஒரிஸா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பிஜூ பட்நாயகின் புதல்வராவர். தந்தையின் மறைவினை அடுத்தே தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தமது தந்தையைப் போலவே தவறிழைக்கும் அதிகாரிகளை கட்டுப்படுத்தி மாநில நிர்வாகத்தை வளர்ச்சிக்கு துணை புரியும் வண்ணம் மாற்றினார்.
12 கோடி மட்டுமே
2000-மாவது ஆண்டில் இருந்து மாநில முதலமைச்சராக பதவி வகிக்கும் அவரது சொத்து மதிப்பு 12 கோடி மட்டுமே. இவரது அமைச்சரவையில் மொத்தம் 22 பேர் உள்ளனர். இவர்களில் 12 பேர் ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
மாநில நிதி அமைச்சர் பி.சி.காடெய்க்கு வெறும் ரூ.2 கோடியே 34 லட்சம் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் லால் பிகாரிதான் அமைச்சர்களிலேயே மிகவும் குறைந்த அளவு சொத்து வைத்திருப்பவர். இவரது சொத்து மதிப்பு ரூ.12 லட்சம் மட்டுமே.
சாதாரண வார்டு கவுன்சிலர்களே தமிழகத்தில் கோடீஸ்வரர்களாக வலம் வரும் இக்காலத்தில்,ஒடிசா மாநில அமைச்சர்கள் பரவாயில்லைதான்.