தி.மு.க. முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மீது நில அபகரிப்பு புகார் !
தர்மபுரி : தி.மு.க. முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், அதனால் அவர் மீது நவடிக்கை எடுக்க கோரி அவர் மீது தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் தர்மபுரியைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் தனசேகரன் மற்றும் பொது மக்கள் ஆகியோர் புகார் மனு கொடுத்தனர்.
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாமாண்டபட்டி என்ற இடத்தில் பேரூராட்சியின் சார்பில் கடந்த 1996 ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது பழத்தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அந்த இடத்தில், பேரூராட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில் மா, கொய்யா, சப்போட்டா ஆகிய பழ மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு வந்தனர்.
பின்பு, தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த முல்லைவேந்தன் அந்த பழத்தோட்டத்தை அழித்துவிட்டு, அதில் 15 ஏக்கர் நிலத்தை தனது மகன் கரிகாலன் பெயரில் பதிவு செய்துள்ளார்.
இதே பகுதியில் கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு பாத்தியமான அரசு புறம்போக்கு நிலம் சுமார் 85 ஏக்கரை ஏழைகளுக்கு தலா 2 ஏக்கர் வீதம் வழங்குவதாக கூறி அதையும் அபகரித்துக் கொண்டததாக கூறப்படுகின்றது. மொத்தம் 155.32 ஏக்கர் நிலத்தில் வேலியிட்டு பண்ணைத் தோட்டம் அமைத்துள்ளார்.
இது குறித்து உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு புதிதாக பொறுப்பேற்ற தலைவர் தனசேகரன் மற்றும் துறைத் தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் பேரூராட்சி அதிகாரிகளுடன் சென்று நில அளவு செய்யும் போது முல்லைவேந்தன் 155.32 ஏக்கர் நிலத்தை அபகரிப்பு செய்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து பேரூராட்சி நிலத்தை மீட்டு முல்லைவேந்தன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரூராட்சி நிர்வாகிகள் பொது மக்களுடன் ஊர்வலமாக சென்று தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.
இதனையடுத்து, இந்த புகார் மீது விசாரணை நடத்த போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.
இதனால் விரைவில் திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகின்றது.