கட்டண உயர்வால் மக்கள் கடும் அதிருப்தி எதிரொலி- மீண்டும் சாதா பஸ்களை ஓட விட்ட அரசு
சென்னை: மக்களின் கடும் அதிருப்தியால் வேறு வழியில்லாமல் நிறுத்தி வைத்த சாதாரண கட்டண பஸ்களை போக்குவரத்துக் கழகங்கள் மீண்டும் இயக்க ஆரம்பித்துள்ளன. அதேபோல எக்ஸ்பிரஸ் பஸ்களும் மீண்டும் ஓட ஆரம்பித்துள்ளன.
பஸ் கட்டண உயர்வை மிகப் பெரிய அளவில் உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவால் மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஒரே நாளில் குறைந்தது ரூ. 20 முதல் ரூ. 50 வரை பஸ்ஸுக்காக கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
மேலும் பஸ் கட்டணத்தை உயர்த்திய கையோடு பெரும்பாலான பஸ்களை சொகுசு பஸ்களாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மாற்றி விட்டன. அதாவது டப்பா பஸ்களையும் கூட சொகுசுப் பேருந்து என்ற போர்டை மட்டும் மாற்றி அதிக கட்டணத்தைக் கறந்து மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இதனால் பஸ்சில் ஏறவே மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டது.
மேலும் கிட்டத்தட்ட 1000 சாதாரண பஸ்களை சென்னையில் நிறுத்தி விட்டனர். அந்த பஸ்களையெல்லாம் சொகுசு பஸ்களாக மாற்றியதால் மக்கள் கடும் எரிச்சலுக்குள்ளானார்கள்.
இதையடுத்து சென்னை நகரில் பஸ்களில் போய் வந்தவர்களில் பெரும்பாலானோர் மின்சார ரயிலுக்கு மாறினர். இதனால் அரசுப் பேருந்துகள் காலியாக ஓட ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டது. இதை அரசும் எதிர்பார்க்கவில்லை, போக்குவரத்துக் கழகங்களும் எதிர்பார்க்கவில்லை.
இதையடுத்து தற்போது மீண்டும் சாதாரண பஸ்களையும், எக்ஸ்பிரஸ் பஸ்களையும் ஓட விட்டுள்ளனர். நேற்று முதல் சென்னையில் இந்த புதிய மாற்றத்தை மாநகர போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது.
முழுமையாக நிறுத்தப்பட்ட ரூட்களில் பாதிக்குப் பாதி தற்போது சாதாரண பஸ்கள் ஓட ஆரம்பித்துள்ளனவாம். அதேபோல எக்ஸ்பிரஸ் பஸ்களும் ஓட ஆரம்பித்துள்ளன. இதனால் மக்களுக்கு ஓரளவு நிம்மதி பிறந்துள்ளது.