முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட உயர் மட்டக் குழு வருகை
சென்னை: முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட மத்திய நீர்வள ஆணைய ஓய்வு பெற்ற அதிகாரிகளான சி.டி.தத்தே, டி.கே.மேத்தா ஆகியோரைக் கொண்ட உயர் மட்டக் குழு வரவுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந் நிலையில் இந்த அணை குறித்து ஆராய்ந்து உயர் மட்டக் குழுவின் கூட்டம் கடந்த 5ம் தேதி டெல்லியில் நடந்தது.
அதில், குழுவில் உள்ள தொழில்நுட்ப உறுப்பினர்களை முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அதிகாரக் குழுவின் உறுப்பினர்களும், மத்திய நீர்வள ஆணைய ஓய்வு பெற்ற அதிகாரிகளுமான சி.டி.தத்தே, டி.கே.மேத்தா ஆகியோர் முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடவுள்ளனர்.
இவர்கள் வரும் 23ம் தேதி அணையைப் பார்வையிட உள்ளதாகத் தெரிகிறது. அப்போது தமிழக பொதுப்பணித் துறையைச் சேர்ந்த மூத்த பொறியாளர்களும் உடன் செல்வர்.
இதற்கிடையே இரு மாநில அதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து டெல்லியில் வரும் 16ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்று இரு மாநில நீர்ப்பாசன துறை செயலாளர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது. ஆனால், இக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.