போர்க் குற்றங்கள்- கொலைகள்: சர்வதேச விசாரணை இல்லை- இலங்கை திட்டவட்ட அறிவிப்பு
கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின் போது ராணுவம் செய்த படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று அந் நாட்டு அரது திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் இதனைத் தெரிவித்தார்.
வெளியுறவுத்துறை மீதான விவாதத்தில் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்பியான சம்பந்தன், போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பெரீஸ், இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு. இதனால் எந்த வெளி நாட்டின் தலையீடுகளுக்கும் அரசாங்கம் அடிபணியாது.
இலங்கை ராணுவத்தின் மீது எழுந்துள்ள புகார் உள்நாட்டு விவகாரம். இதில் எந்த ஒரு அன்னிய நாடும் தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம்.
இத்தகைய விசாரணைகள், மக்களுக்கு மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும், சம்பந்தன் யாருக்காக வாதாடுகிறாரோ அந்த மக்கள்தான் (தமிழர்கள்) அசௌகரியத்திற்குள்ளாவர்.
இதனால் இந்த விவகாரத்தில் சர்வதேச போலீஸ் விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது அப்பாவி மக்களை கொன்று குவித்து மனித உரிமையை ராணுவம் மீறியதாக ஐ.நா. குழு குற்றம் சுமத்தியுள்ளதும், இது குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மீது பான் கீ மூன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.