வேலூர் அருகே விவசாயியை கடித்துக் குதறிய கரடி
வேலூர்: வேலூர் அருகே விவசாயி ஒருவரின் கழுத்தை கரடி கடித்துக் குதறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அபிகிரி பட்டறையைச் சேர்ந்தவர் குருசாமி(55). விவசாயி. அவர் மாலை நேரத்தில் வழக்கம் போல் இரவு காவலுக்காக தனது நிலத்திற்கு சென்று படுத்திருந்தார்.
அப்போது அங்கு திடீர் என்று வந்த கரடி ஒன்று குருசாமி நிலத்தில் இருந்த துவரை பயிர்களை தின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குருசாமி கரடியை விரட்ட முயன்றார். ஆனால் கரடியோ தன்னை விரட்ட வந்த குருசாமியின் கழுத்துப் பகுதியை கடித்துக் குதறியது. மேலும் அவரது கை, கால்களை நகத்தால் கீறியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
குருசாமியின் சத்தம் கேட்டு அப்பகுதி விவசாயிகள் 50 பேர் கம்புகளுடன் திரண்டு வந்து கரடியை விரட்டி அடித்து அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. அவை நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. மேலும் தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், கரடிகளை உடனே பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications