சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் உள்நோயாளிகள் பிரிவு - முதல்வரிடம் கோரிக்கை
இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வரிடம் பேசுவதாக அமைச்சர் விஜய் உறுதியளித்தார்.
சென்னை தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரியின் பல் சீரமைப்பு துறையின் சார்பில் பல் மற்றும் முகத்தோற்ற குறைபாடுகள் குறித்த டாக்டர்களுக்கான கருத்தரங்கம் தொடக்க விழா கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நேற்று காலை நடைபெற்றது. கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வர் டாக்டர் கே.எஸ்.ஜி.ஏ.நாசர் தலைமை தாங்கினார்.
கருத்தரங்கின் தலைவர் பேராசிரியர் சி கருணாநிதி, வரவேற்புரையாற்றினார். இந்தியாவின் மிகச் சிறந்த பல் மருத்துவக் கல்லூரி எனப் புகழ்பெற்ற சென்னை பல்மருத்துவக் கல்லூரியின் சேவைகளை மக்களும் பல் மருத்துவ மாணவர்களும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தனது பேச்சில் குறிப்பிட்டார் டாக்டர் கருணாநிதி.
கல்லூரி முதல்வர் நாசர் பேசுகையில், கல்லூரிக்கு உள்நோயாளிகள் பிரிவும், கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளும் இருந்தால் அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றார்.
மருத்துவக்கல்வி துணை இயக்குனர் டாக்டர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் வி.எஸ்.விஜய் பேசுகையில், "மருத்துவப்பணி என்பது மிகவும் புனிதமானது. நாளுக்கு நாள் வரும் நவீன உயர் சிகிச்சைகளை அறிந்து சிகிச்சை முறைகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நவீன சிகிச்சைக்கான அறிவை வளர்த்துக் கொள்ள இந்த கருத்தரங்கம் மிகவும் உதவிக்கரமாக இருக்கும். ஒருவருக்கு தெரிந்த சிகிச்சை முறையை மற்ற டாக்டர்களும் அறிந்து கொள்ள இந்த கருத்தரங்கும் உதவும்.
கருத்தரங்களில் பரிமாறப்படும் கருத்துக்களை மருத்துவ மாணவர்கள் அடிப்படையாக கொண்டு செயல்படவேண்டும். நல்ல அறிவார்ந்த பேராசிரியர் கிடைக்கப்பெற்றுள்ள மாணவர்களை வாழ்த்துகிறேன்.
இந்த பல் மருத்துவக் கல்லூரியில் உள்நோயாளிகள் பிரிவு அமைய முதல்வரிடம் கூறி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிய மருத்துவமனைக் கட்டிடத் திறப்பு விழாவும் விரைவில் நடக்கும்," என்றார்.
சென்னை மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 107 பல் டாக்டர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். துணை முதல்வர் சாய்நாய், மருத்துவர் விமலா உள்பட பலரும் பங்கேற்றனர்.
பல் மருத்துவக் கல்லூரிக்கு சென்ற ஆட்சியில் கூடுதல் நிலம் வழங்கப்பட்டது. கூடுதலாக மருத்துவமனைக் கட்டடமும் கட்டப்பட்டது. ஆனால் இன்னமும் திறந்து வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு சராசரியாக 1000 நோயாளிகள் வருகிறார்கள். ஆண்டுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள் பயன்பெறுகிறார்கள். மிக அதிக செலவு பிடிக்கும் சிக்கலான பல் மற்றும் முகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.