உயிரைக் குடிக்கும் பழவேற்காடு ஏரி-ஏற்கனவே 15 பேரை காவு வாங்கியுள்ளது
திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்வதும், விபத்து ஏற்படுவதும் புதிதல்ல. தொடர்ந்து நடைபெறும் தொடர் கதையாக மாறியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றபோது 15 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பழவேற்காடு ஏரியான, கடலுடன் போய் முடிகிற இடத்தில் இருப்பதால் இந்த ஏரிக்கு வருவதற்கு பலரும் ஆசைப்படுகின்றனர். ஆனால் இங்கு படகுப் பயணமானது ஒரு குறிப்பிட்ட தூரம் வரைக்கும்தான் பாதுகாப்பானது. அதற்குப் பின்னர் உயிருக்கு உத்தரவாதமில்லை.
ஆனால் படகோட்டிகள் பலர் பணத்திற்கு ஆசைப்பட்டு அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்று விபத்தில் சிக்கி விடுகின்றனர். வழக்கமாக 10 பேர் வரை படகில் ஏற்றுவதுண்டு. இது நல்ல மனம் படைத்த மீனவர்களின் வழக்கம். அதற்கு மேல் ஆட்களை ஏற்ற மாட்டார்கள். ஆனால் சிலர் என்ன செய்வார்கள் என்றால் 20 பேருக்கும் மேல் ஏற்றிச் செல்கிறார்கள். இது அபாயகரமானது. படகு பாரம் தாங்க முடியாமல் ஏரியில் செல்லும்போது கரையில் இருக்கும் நாங்கள் திகிலுடன் பார்த்தபடி இருப்போம் என்கிறார்கள் அங்குள்ள சில மீனவர்கள்.
அப்படித்தான் நேற்று 25 பேரை அழைத்துக் கொண்டு போய் விபத்தில் சிக்கியுள்ளனர். மேலும் நேற்று விபத்து நடந்த இடம் கிட்டத்தட்ட 30 அடி ஆழமான இடமாகும். நீச்சல் தெரியாத யாரும் நிச்சயம் உயிர் தப்ப முடியாது. நீச்சல் தெரிந்தவர்களே கூட சற்று கவனக்குறைவாக இருந்து விட்டால் உயிர் போய் விடும் என்கிறார்கள். காரணம், கடலும், ஏரியும் சந்திக்கும் முகத்துவாரம் என்பதால் நிறைய நீர்ச் சுழல்களும் அப்பகுதியில் இருக்குமாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் கல்லூரி மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் சென்று விபத்தில் சிக்கியது ஒரு படகு. அதில் இருந்த 15 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்கிறார்கள் அப்பகுதியினர்.
சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில், முட்டுக்காடு என்ற இடமும்ம கூட முகத்துவாரப் பகுதிதான். அங்கு பாதுகாப்பான முறையில் அரசின் சுற்றுலாத்துறையே படகு சவாரியை சிறப்பாக நடத்தி வருகிறது. அதேபோல பழவேற்காட்டிலும் அரசே படகு சவாரியை நடத்தினால் இந்தப் பிரச்சினையே வராது என்கிறார்கள் பொதுமக்கள்.