வடமாநிலங்களில் கடும் குளிர்: உயிரிழப்பு 135 ஆக உயர்வு
டெல்லி: வட இந்திய மாநிலங்களில் நிலவும் கடும் குளிருக்கு இதுவரை 135 பேர் பலியாகி உள்ளனர். காலை 11 மணிவரை பனி மூட்டமாக இருப்பதால் விபத்து ஏற்பட்டும் பலர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. வட மாநிலங்களில் வெப்பநிலை இயல்பான அளவை விட குறைந்து விட்டது. குளிருக்கு மட்டும் இதுவரை 135 பேர் பலியாகி உள்ளனர்.
விடிந்து 11மணிவரைக்கும் மூடுபனி நிலவுவதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. பனி மூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டும் பலர் இறந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் விபத்தில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.
குறைந்த வெப்பநிலை
காஷ்மீரில் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 4.7 டிகிரி செல்சியசாகவும், லடாக் பகுதியில் மைனஸ் 14.4 டிகிரி செல்சியசாகவும் உள்ளது. உத்தரபிரதேசத்தில் கான்பூர், ஆக்ரா, கோரக்பூர், வாரணாசி, அலகாபாத், லக்னோ ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட, குளிர் அதிகமாக உள்ளது.
இங்கு சாரசரியாக வெப்ப நிலை 4.1 டிகிரி செல்சியசாக உள்ளது.
பஞ்சாப்பில் குளிர்ச்சியான நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. அமிர்தசரஸ் நகரில் வெப்ப நிலை மைனஸ் 1.6 டிகிரி செல்சியசாக உள்ளது. லூதியானா, பாட்டியாலா ஆகிய நகரங்களில் வெப்ப நிலை முறையே 0.8 மற்றும் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்துள்ளது. அரியானா, ஹிசார் ஆகிய நகரங்களில் 0.7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உள்ளது.