பிரதமர் சிறப்பு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில் 2 பேர் கைது
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் நின்ற பிரதமரின் சிறப்பு விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னையைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் முல்லைப் பெரியாறு விவகாரம், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் உற்பத்தி துவங்கும் என்று அறிவித்த பிரதமருக்கு தேமுதிகவினர் கருப்பு கொடி காட்டப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் கருப்புக் கொடி காட்டுவதற்கு முன்பே கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு பல பிரச்சனைகளுக்கு மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்றுமுன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக பிரதமரின் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக சென்னை பல்லாவரம் காவல் நிலையத்திற்கு மிரட்டல் அழைப்பு வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறி்த்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். உடனே வெடிகுண்டு நிபுணர்கள் திருச்சி விமான நிலையத்தில் நின்ற பிரதமரின் சிறப்பு விமானத்தை தீவிரமாக சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஒரு குறிப்பிட்ட வோடபோன் எண்ணிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் அந்த மொபைல் சிம் அயனாவரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.
ஆனால் அயனாவரத்தில் விசாரித்தபோது அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தனது வீட்டை காலி செய்து பூந்தமல்லியில் குடியேறிது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பூந்தமல்லியைச் சேர்ந்த ரவிச்சந்திரனையும், ஜெயக்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.