முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுயிக்கின் 170வது பிறந்தநாள்: வைகோ மரியாதை
நெல்லை: தனது சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுயிக்கின் 170வது பிறந்த நாளன்று அவரது படத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலமான 19ம் நூற்றாண்டில் தென்தமிழகத்தில் மானவாரி விவசாயம் செய்து வந்தனர். 1806ம் ஆண்டு முதல் 1840ம் ஆண்டு வரை தென் தமிழகத்தி்ல் கடும் பஞ்சம் நிலவியது. இதனை கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் நீர் ஆதாரங்களை அதிகரிக்க முடிவு செய்தனர்.
அதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கிய அவர்கள் முல்லைப் பெரியாறு வனப்பகுதியில் அணை கட்ட சாத்தியம் இல்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் 1841ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி பிறந்து அந்நாட்டு ராணுவத்தில் கேப்டனாக பணிபுரிந்த பொறியாளர் பென்னிகுயிக்கிடம் ஆங்கிலேய அரசு முல்லைப் பெரியாறு அணை திட்டத்தினை ஒப்படைத்தது. அவர் இத்திட்டத்தை தனது சொந்த பணம் மூலம் நிறைவேற்றி தென்மாவட்ட மக்களின் வாழ்வை வளம்பெறச் செய்தார்.
இந்நிலையில் தமிழர்கள் திருநாளன்று வரும் அவரது 170வது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி பொங்கல் தினமான நேற்று வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் பென்னிகுயிக் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மதிமுக கொடிகளை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பென்னிகுயிக் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications