திண்டிவனம் ராமமூர்த்திக்கு தமிழக அரசின் காமராஜர் விருது!
சென்னை: திருவள்ளுவர், பெரியார், அண்ணா, அம்பேத்கர், காமராஜர், பாரதியார், பாவேந்தர் பெயரிலான விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தமிழறிஞர்களுக்கு இன்று அந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது முதலான விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இவ்வாண்டு தமிழக அரசின் விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு:
திருவள்ளுவர் விருது- புலவர் செ.வரதராசன்
தந்தை பெரியார் விருது-டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன்,
அண்ணல் அம்பேத்கர் விருது- பேராசிரியர் முனைவர் க.காளியப்பன்
பேரறிஞர் அண்ணா விருது- இரா. செழியன்
பெருந்தலைவர் காமராஜர் விருது- திண்டிவனம் ராமமூர்த்தி
மகாகவி பாரதியார் விருது- முனைவர் இரா. பிரேமா
பாவேந்தர் பாரதிதாசன் விருது- கவிஞர் ஏர்வாடி சு.இராதாகிருஷ்ணன்
தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது- பேராசிரியர் முனைவர் நா.செயப்பிரகாசு
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது- பேராசிரியர் முனைவர் இரா. மோகன். இந்த விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் வளாக அரங்கத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு தமிழறிஞர்களுக்கு விருதுத் தொகையாக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கி, தங்கப் பதக்கமும் அணிவித்து, அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கி விழாப் பேருரையாற்றுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பல வருடங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியிலிருந்த திண்டிவனம் ராமமூர்த்தி அதிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். ஆனால், அவருக்கு சீட் ஏதும் தரப்படவில்லை. இதையடுத்து கட்சியை தேசியவாத காங்கிரசில் இணைத்தார். அதிலிருந்தும் அவர் நீக்கப்பட்டதையடுத்து இப்போது அமைதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.