சென்னை வங்கிக் கொள்ளையர்களைப் பிடிக்க 30 தனிப்படைகள்: தகவல் கொடுப்போருக்கு சன்மானம்
சென்னை: சென்னையை அடுத்த பெருங்குடியில் பட்டப் பகலில் பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.24 லட்சம் பணத்தை கொள்ளையடித்தவர்களைக் கண்டுபிடிக்க 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் பாங்க் ஆப் பரோடா வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் வாடிக்கையாளர்களை அறையில் வைத்து பூட்டிவிட்டு வங்கிக் காசாளர், மேலாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.24 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிவிட்டது.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து 150க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இருப்பினும் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.
காசாளர் மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்தபோது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் கூறிய அடையாளங்களை வைத்து 2 பேரின் படங்கள் கம்ப்யூட்டரில் வரையப்பட்டுள்ளது. அந்த கொள்ளைக் கும்பல் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 23ம் தேதி துரைப்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்குடியில் பரோடா வங்கியில் நடந்த கொள்ளை தொடர்பாக துப்பு துலக்கப்பட்டு வருகிறது. கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்த தகவல்களை 9884203821 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.
தகவல் அளிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். அவர்களின் பெயர், விலாசம் மற்றும் விவரம் ரகசியமாக வைக்கப்படும். பொதுமக்கள் இந்த வங்கி கொள்ளையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் பற்றிய சிறு விபரங்களை கூட உடனடியாக தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications